மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் முதல் வாரம் தமிழகம் வருகை


மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் முதல் வாரம் தமிழகம் வருகை
x
தினத்தந்தி 22 July 2021 7:45 AM GMT (Updated: 22 July 2021 7:45 AM GMT)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழ்நாட்டிற்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் வருகை தருகிறார்.

புதுடெல்லி

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரின் கருணாநிதியின் நினைவு தினமான ஆகஸ்ட் 7 ஆம் தேதி வருகிறது. அப்போது சட்டசபையில் கருணாநிதியின் உருவ படத்தை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. கருணாநிதியின் படத்திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களை அழைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்க கடந்த வாரம் 19-ம் தேதி டெல்லி சென்றார். அப்போது முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளின் போது அவரது படத்திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். 

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழ்நாட்டிற்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜனாதிபதி பங்கேற்கும் தேதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சபாநாயகர் அப்பாவு நேற்று சட்டசபை செயலக அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

 சட்டசபையில் கருணாநிதியின் உருவப்படத்தை சபை மண்டபத்தில் எந்த இடத்தில் வைக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. மறைந்த தலைவர்களை பெருமைப்படுத்தும் வகையில் சட்டசபை கூட்டரங்கில் இதுவரை திருவள்ளுவர், மகாத்மா காந்தி, ராஜாஜி, பெரியார், காமராஜர், அண்ணா, காயிதே மில்லத், அம்பேத்கர், முத்துராமலிங்க தேவர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ராமசாமி படையாச்சியார், வ.உ.சி.சிதம்பரனார், ப.சுப்பராயன், ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் ஆகிய 15 பேர் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இப்போது 16-வதாக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு முழு உருவப்படம் திறக்கப்பட உள்ளது.

Next Story