இரண்டாவது திருமணம் செய்த இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை முதல் கணவர் வெறிச்செயல்


இரண்டாவது திருமணம் செய்த இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை முதல் கணவர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 23 July 2021 12:27 AM GMT (Updated: 23 July 2021 12:27 AM GMT)

இரண்டாவது திருமணம் செய்த இளம்பெண் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது முதல் கணவரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் கல்லூத்து கிராமத்தை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 30). விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கும், நெல்லை மாவட்டம் அருணாசலபுரம் கிராமத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி மகள் சங்கீதா என்ற மகாலட்சுமி (22) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் பொன்ராஜ் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். சங்கீதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அவரது வீட்டிற்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சங்கீதாவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி விட்டார். இதில் சங்கீதா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

போலீஸ் விசாரணை

இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக வீரகேரளம்புதூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. வாகைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் கண்ணன் (30) என்பவருக்கும், சங்கீதாவுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் ஆன சில மாதங்களிலேயே குடும்ப பிரச்சினை காரணமாக கண்ணனை சங்கீதா பிரிந்து சென்றுவிட்டார். பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் இருவரும் சமரசம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.

விவாகரத்து பெறாமல்...

இதற்கிடையே முறையாக விவாகரத்து பெறாமல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பொன்ராஜை சங்கீதா திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன் சங்கீதாவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக நேற்று காலையில் ஊரில் இருந்து மோட்டார் சைக்கிளில் கல்லூத்துக்கு கண்ணன் வந்தார். அங்குள்ள சங்கீதா வீடு குறித்து கேட்டறிந்து, அவரது வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. போலீசார் கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story