வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்


வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 23 July 2021 10:01 PM GMT (Updated: 23 July 2021 10:01 PM GMT)

வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை என்ற புதிய துறையை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச்செயலகத்தில், பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் மறுவாழ்வு, வெளிநாடுவாழ் தமிழர்கள் நலன், தாயகம் திரும்பியோர் மறுவாழ்வு, முன்னாள் படை வீரர்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

“தலைநிமிரும் தமிழகம்” தொலைநோக்குத் திட்டங்களில் அறிவுறுத்தியபடி வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன் பேணிடவும், அங்கு பாதிப்புக்கு உள்ளானோருக்கு உதவிடவும், நாடு திரும்பிய வெளிநாடுவாழ் தமிழர்களின் வாழ்வாதாரத்திற்குத் துணை நிற்கவும், வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை என்ற ஒரு புதியதுறையை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், வெளிநாடுவாழ் தமிழர்கள் நலவாரியம் அமைப்பதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

குழு அமைக்க நடவடிக்கை

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வழிகாட்டுதல் குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள் கட்டு வதற்கும், குடிநீர், கழிவறை வசதி, தெருவிளக்கு, மின்வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், மாதாந்திர பணக்கொடையை உயர்த்தி வழங்கிடவும், சமையல் பாத்திரங்கள் மற்றும் துணிமணிகள் வழங்குவதற்கான ஒதுக்கீட்டையினை உயர்த்தி வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொண்டார்.

மேலும், இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கவும், திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். வெளிநாடுவாழ் தமிழர்களுக்குத் காப்பீட்டுத் திட்டம், அடையாள அட்டை, கட்டணமில்லா தொலைபேசி உதவி மையம், வெளிநாடுவாழ் தமிழர்களின் குழந்தைகளுக்குத் தமிழ்மொழியை இணைய வழியில் கற்பிப்பதற்குத் தமிழ் இணையக் கல்விக்கழகம் அமைப்பது ஆகியவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

உரிய நடவடிக்கை

புதியதாக முன்னாள் படை வீரர் நல அலுவலகங்கள் தோற்றுவிக்க ஆய்வுகள் மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் படை வீரர் நலவாரியத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதுடன், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குப் பயனளிக்கும் வகையில், திறன்மேம்பாடு, வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து, திட்டமிட்டுச் செயல்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளர் டி.ஜகந்நாதன், பொதுத் துறை துணைச் செயலாளர் எம்.பிரதீப்குமார், துணைச்செயலாளர் (மரபு) டாக்டர் எஸ்.அனு, அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல இயக்குநர் ஜெஸிந்தாலாசரஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story