ஸ்ரீபெரும்புதூர் அருகே 3-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை


ஸ்ரீபெரும்புதூர் அருகே 3-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 24 July 2021 12:07 AM GMT (Updated: 24 July 2021 12:07 AM GMT)

ஸ்ரீபெரும்புதூர் அருகே 3-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்ரீபெரும்புதூர்,

சென்னை அம்பத்தூர் ஒரகடம் அருகே புதூர் சிவசண்முகம் சாலையை சேர்ந்தவர் ராஜ். இவரது மகள் சோனாலி (வயது 20). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள சவீதா மருத்துவ கல்லூரியில் சுகாதார அறிவியல் தொடர்புடைய மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த புதன்கிழமை கல்லூரியில் தேர்வு நடைபெற்றது. அப்போது சோனாலி காப்பி அடித்ததையடுத்து அவரை ஆசிரியை கையும் களவுமாக பிடித்துள்ளார். சோனாலியின் தந்தையை கல்லூரிக்கு வரவழைத்து கண்டித்துள்ளார். இனிமேல் இதுபோல் நடக்காது என்று மாணவி கடிதம் எழுதி கொடுத்துள்ளார். நேற்று கல்லூரியின் 7-வது மாடியில் வழக்கம்போல தேர்வு நடைபெற்றது.

தற்கொலை

மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி கொண்டிருந்தனர். அப்போது மாணவி சோனாலி ஆசிரியைக்கு தெரியாமல் மீண்டும் செல்போனை வைத்து காப்பி அடித்துள்ளார். ஆசிரியை அவரை கையும் களவுமாக பிடித்து செல்போனை வாங்கி வைத்துள்ளனர். சோனாலியை தேர்வு எழுத அனுமதிக்காமல் தனியாக அமர வைத்தார். சிறிது நேரம் கழித்து கீழே செல்வதாக கூறி விட்டு சோனாலி 7-வது மாடியில் இருந்து 3-வது மாடிக்கு வேகமாக இறங்கி வந்தார்.

பின்னர் அவர் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் சோனாலி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவி சோனாலி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story