தொழிற்சாலை ஊழியர்களுக்கு 2 தவணை தடுப்பூசி கட்டாயம் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது


தொழிற்சாலை ஊழியர்களுக்கு 2 தவணை தடுப்பூசி கட்டாயம் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது
x
தினத்தந்தி 25 July 2021 10:51 PM GMT (Updated: 25 July 2021 10:51 PM GMT)

தொழிற்சாலை ஊழியர்கள் 2 தவணை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்றும், பணியிடங்களில் ஊழியர்கள் முக கவசம் அணிந்திருப்பதை நிர்வாகம் தரப்பில் கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

சென்னை,

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதற்கு மக்களை அரசு அறிவுறுத்தி வருகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு பிறப்பித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி நடந்த பணிக்குழு கூட்டத்தில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, அதிக முன்னுரிமை பெற்ற குழுவாக கருதி தொழிற்சாலைகள், நிறுவனங்கள் பின்பற்றவேண்டிய 12 அம்ச வழிகாட்டு நெறிமுறைகனை பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் பிறப்பித்துள்ளார்.

அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ள விவரங்கள் வருமாறு:-

2 தவணை தடுப்பூசி கட்டாயம்

பணியிடத்துக்கோ அல்லது தொழிற்சாலைகளுக்கோ செல்லும் ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி கட்டாயமாக போட்டிருக்க வேண்டும். 300 ஊழியர்களுக்கு அதிகமானோர் பணியாற்றினாலோ அல்லது 10 ஆயிரம் சதுர அடிக்கு அதிகமான பரப்பளவை கொண்டிருந்தாலோ சுகாதார நடவடிக்கைகளை அமல்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் சுகாதார ஆய்வாளரை தங்களுடைய செலவில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் நியமிக்க வேண்டும்.

இவ்வாறு நியமிக்கப்படும் சுகாதார ஆய்வாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பொது சுகாதாரம் தொடர்பான படிப்பினை (டாக்டர்கள் படித்திருக்க வேண்டியதில்லை) படித்திருக்க வேண்டும். அவர் நுழைவு வாயிலில், ஊழியர்களை சோதிக்க வேண்டும். உடல் வெப்ப பரிசோதனையை அளவிடுவதோடு, நோய்க்கான அறிகுறிகளையும், அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு கடந்த ஒரு வார காலத்தில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலோ அந்த தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.

கேமரா மூலம் கண்காணிப்பு

ஊழியர்களுக்கு நோய்க்கான அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்துவதோடு, அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்ப வேண்டும். கடந்த ஒரு வாரத்தில் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் ஊழியர்கள் அதனை தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு உள்ள ஊழியர்களும் தனிமைப்படுத்தப்படுவதோடு, ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக நிர்வாகம் தரப்பில் பரிந்துரைக்கப்பட வேண்டும்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குறிப்பாக தொழிற்சாலைகள் மற்றும் பணி இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கண்டிப்புடன் பின்பற்றப்பட வேண்டும். இதனை மாவட்ட சுகாதார அதிகாரிகள் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். ஊழியர்கள் பணி செய்யும் அனைத்து நேரங்களிலும் முக கவசம் அணிகிறார்களா? என்பதை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நிர்வாகம் முறையாக கண்காணிக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

கண்ணாடி இழை ‘ஷீட்டு’கள்

பணி செய்யும் ஊழியர்களுக்கு இடையே குறைந்தது 2 மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும். இந்த இடைவெளியை ஏற்படுத்த முடியாத சூழலில், கண்ணாடி இழை ‘ஷீட்டுகள்' அல்லது திரைகள் இருப்பதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். கேண்டீன் மற்றும் சாப்பிடும் அறைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு ஊழியர்களுக்கு, இணையதள முறையில் பயிற்சி நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டும்.

மேற்கண்ட அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

Next Story