ஏ.டி.எம். கொள்ளை வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பேட்டி


ஏ.டி.எம். கொள்ளை வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பேட்டி
x
தினத்தந்தி 26 July 2021 12:13 AM GMT (Updated: 26 July 2021 12:13 AM GMT)

தமிழகத்தில் நடந்த ஏ.டி.எம். கொள்ளை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறினார்.

சென்னை,

வடமாநிலங்களில் இருந்து சென்னை வந்து, ஆதரவின்றி சுற்றித்திரிந்த 557 பேர் காக்கும் கரங்கள் மூலம் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்களில் முதல் கட்டமாக 127 பேரை ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு வழியனுப்பி வைக்கும் நிகழ்வு நேற்று சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடந்தது.

அப்போது அவர்களுக்கு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கி வழியனுப்பி வைத்தார். இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

சென்னையில் மீட்கப்பட்ட 127 வடமாநிலத்தவர்கள் ரெயில் முலம் ராஜஸ்தான் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்குள்ள அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள். பின்னர் ராஜஸ்தான் காப்பகங்களில் உள்ள 57 தமிழர்கள் ரெயில் மூலம் சென்னைக்கு திரும்பி அழைத்து வரப்பட இருக்கின்றனர். சென்னையில் வழிப்பறி, செல்போன் பறிப்பு உள்ளிட்ட குற்ற செயல்களை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை

அதன்படி அதிக அளவு குற்றச்சம்பவங்கள் நடைபெறும் பகுதிகள் ‘ஹாட் ஸ்பாட்’ ஆக அடையாளம் காணப்பட்டு பகுதி வாரியாக பிரித்து கண்காணிப்பை அதிகரித்துள்ளோம். மேலும், அதிக அளவு குற்ற செயல்கள் நடைபெறும் பகுதிகளில் ‘மப்டி’ உடை அணிந்த போலீசாரும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பிடிபடும் குற்றவாளிகளில் 50 சதவீதம் பேர் புதிய குற்றவாளியாக இருக்கிறார்கள். அனைவரையும் கைது செய்து அவர்களின் விவரங்களை சேகரித்து வைத்துள்ளோம்.

கண்காணிப்பு கேமரா உள்ள பகுதிகளில் 90 சதவீதம் குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றனர். குற்ற செயல்களை தடுக்கும் வகையில் ரவுடிகளை வகைப்படுத்தி கைது செய்து வருகிறோம். தேவைப்பட்டால் குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குடியரசு தலைவர் சென்னை வர உள்ள நிலையில் அதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏ.டி.எம். கொள்ளை வழக்கு

சில நாட்களுக்கு முன்பு நடந்த ஏ.டி.எம். கொள்ளை தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதம் உள்ளவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். ஏ.டி.எம். கொள்ளையர்கள் நாடு முழுவதும் 16 மாநிலங்களில் கைவரிசை காட்டி உள்ளனர். அதில், தமிழகத்தில் மட்டுமே கொள்ளையர்கள் பிடிபட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் லோகநாதன், ரெயில்வே எஸ்.பி. டாக்டர் தீபா சத்யன், சென்னை ரெயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story