தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 26 July 2021 10:00 AM GMT (Updated: 26 July 2021 10:00 AM GMT)

கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

மேலும், ஜூலை 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

தென்மேற்கு, வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Next Story