ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இருக்கும் தமிழக வீரர்களை உற்சாகப்படுத்த ‘‘வென்று வா வீரர்களே’’ பாடல் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்


ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இருக்கும் தமிழக வீரர்களை உற்சாகப்படுத்த ‘‘வென்று வா வீரர்களே’’ பாடல் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
x
தினத்தந்தி 27 July 2021 1:51 AM GMT (Updated: 27 July 2021 1:51 AM GMT)

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இருக்கும் தமிழக வீரர்களை உற்சாகப்படுத்த ‘‘வென்று வா வீரர்களே’’ என்ற பாடலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

சென்னை,

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக விளையாட்டு வீரர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 16-7-2021 அன்று காணொலிக்காட்சி மூலமாக பேசும்போது, “இந்த அரசு விளையாட்டுத் துறைக்கு ஊக்கமளிக்கும் அரசாக இருக்கும். இந்த அரசுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் நீங்கள் அனைவரும் பதக்கத்துடன் வரவேண்டும். அனைவரும் பதக்கம் பெற எனது வாழ்த்துகள்” என்று உற்சாகப்படுத்தி வாழ்த்தினார்.

அதன் தொடர்ச்சியாக, 26-7-2021 அன்று (நேற்று) சென்னை தலைமைச்செயலகத்தில், டோக்கியோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நம் மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் தமிழ்நாடு கூடைப் பந்தாட்டக் கழகத்தால் தயாரிக்கப்பட்டு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவால் இயற்றி இசை அமைக்கப்பட்ட ‘‘வென்று வா வீரர்களே’’ என்ற பாடலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

பங்கேற்றவர்கள்

இந்நிகழ்வின்போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் சந்த் மீனா, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஆதவ் அர்ஜூன் ஆகியோர் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story