மக்கள்தொகை, பாதிப்பு அடிப்படையில் மாநிலங்களுக்கான தடுப்பூசி வினியோகத்தை சீரமைக்க வேண்டும்


மக்கள்தொகை, பாதிப்பு அடிப்படையில் மாநிலங்களுக்கான தடுப்பூசி வினியோகத்தை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 27 July 2021 3:12 AM GMT (Updated: 27 July 2021 3:12 AM GMT)

மக்கள்தொகை, பாதிப்பு அடிப்படையில் மாநிலங்களுக்கான தடுப்பூசி வினியோகத்தை சீரமைக்க வேண்டும் மோடிக்கு தமிழக காங்கிரஸ் வலியுறுத்தல்.

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று பரவியது முதல் அதை எதிர்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதில் தெளிவற்ற கொள்கைகளை பா.ஜ.க. நடைமுறைப்படுத்தி வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை 2021 மதிப்பீட்டின்படி மொத்த மக்கள்தொகை 7.88 கோடி. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 44 ஆயிரத்து 870. இதுவரை தமிழகத்தில் 1 கோடியே 91 லட்சத்து 50 ஆயிரத்து 418 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் மொத்த மக்கள்தொகை 6.48 கோடி. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 8 லட்சத்து 24 ஆயிரத்து 546 பேர். அம்மாநிலத்தில் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 58 லட்சத்து 68 ஆயிரத்து 770. இந்த 2 மாநிலங்களையும் ஒப்பிட்டுப்பார்த்தால் பா.ஜ.க. அரசின் அப்பட்டமான பாரபட்சமான போக்கு புரியும். இத்தகைய அணுகுமுறையை பிரதமர் கையாளுவது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கிற செயலாகும்.

கொரோனாவில் இருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்கவேண்டிய மோடி, தனது சொந்த மாநிலத்துக்கு சலுகை காட்டுவது அவரது பதவிக்கு அழகல்ல. இத்தகைய பாரபட்சமான அணுகுமுறையைத் தவிர்த்து, தடுப்பூசி வினியோகத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் மக்கள்தொகை மற்றும் பாதிப்பின் அடிப்படையில் ஒரு தெளிவான கொள்கையை வகுத்து தடுப்பூசி வினியோகத்தைச் சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story