சூனியம் வைக்க வந்ததாக உயிரோடு வாலிபருக்கு தீவைப்பு


சூனியம் வைக்க வந்ததாக உயிரோடு வாலிபருக்கு தீவைப்பு
x
தினத்தந்தி 27 July 2021 5:48 PM GMT (Updated: 27 July 2021 5:48 PM GMT)

சூனியம் வைக்க வந்ததாக நினைத்து உயிரோடு வாலிபருக்கு தீவைத்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சூனியம் வைக்க வந்ததாக நினைத்து உயிரோடு வாலிபருக்கு தீவைத்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலைதேடி வந்தவர்
திருச்சி பிராட்டியூர் கீழத்தெருவை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 31). இவர், வேலை தேடி கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரிக்கு வந்ததாக கூறப்படுகிறது.
வேலை கிடைக்காததால் புதுவையில் சுற்றி திரிந்த அவர், ஆங்காங்கே படுத்து தூங்கி நேரத்தை கழித்து வந்துள்ளார். அதேபோல் நேற்று முன்தினம் இரவும், மேட்டுப்பாளையத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றுக்கு சென்று தூங்க சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது திருட வந்ததாக கருதி அவரை பிடித்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் விசாரித்துள்ளனர். இதை சதீஷ்குமார் மறுத்துள்ளார். இருப்பினும் சந்தேகமடைந்த ஊழியர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்களான ராஜமவுரியா, ராஜவரதன் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். 
தீவைப்பு
உடனே அவர்களும் பெட்ரோல் பங்கிற்கு வந்து விசாரித்தனர். மேலும் அவர் பில்லி, சூனியம் வைக்க வந்தவராக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்துள்ளனர். ஆனால் சதீஷ்குமார் தான் வேலை தேடி புதுவை வந்ததாக தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சதீஷ்குமாரை மிரட்ட அவர் மீது பெட்ரோலை ஊற்றி உண்மையை சொல்லாவிட்டால் கொளுத்திவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் பற்ற வைத்த தீ சதீஷ்குமார் மீது விழுந்து தீப்பிடித்தது. 
இதனால் உடல் முழுவதும் தீ பரவியதால் அலறி துடித்தார். இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அங்கிருந்த தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீயை அணைத்தனர்.
ஆனாலும் சதீஷ்குமாருக்கு வயிற்றுப் பகுதியில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
4 பேர் கைது
இதுபற்றி தகவல் அறிந்து சதீஷ்குமாரின் உறவினர்கள் புதுச்சேரி வந்து அவரது நிலையை கண்டு அழுது துடித்தனர். தொடர்ந்து சிகிச்சையின்போது உதவியாக இருந்து வருகின்றனர்.
தீவைப்பு சம்பவம் குறித்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ராஜமவுரியா, ராஜவரதன், ஊழியர்களான சொக்கநாதன்பேட்டையை சேர்ந்த சிவசங்கர் (19), அரசூர் குமார் (47) ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜமவுரியா, ராஜவரதன் ஆகியோர் அண்ணன்-தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. 
வேலை தேடி வந்த வாலிபரை உயிரோடு எரித்துக் கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story