தமிழகத்தில் காற்றாலைகள் மின்சார உற்பத்தியில் உச்சத்தில் உள்ளது - எரிசக்தி துறை அதிகாரிகள் தகவல்


தமிழகத்தில் காற்றாலைகள் மின்சார உற்பத்தியில் உச்சத்தில் உள்ளது - எரிசக்தி துறை அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 27 July 2021 7:53 PM GMT (Updated: 27 July 2021 7:53 PM GMT)

தமிழகத்தில் காற்றாலைகள் மின்சார உற்பத்தியில் உச்சத்தில் உள்ளது என்று எரிசக்தி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை, 

இந்திய அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, பல்லடம், உடுமலை, தேனி உள்ளிட்ட இடங்களில் 8,152 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 11 ஆயிரத்து 800 காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன. காற்றாலை மின் உற்பத்தி ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இருக்கும்.

ஆனால் இந்த ஆண்டு காற்றாலை மின் உற்பத்தி கடந்த ஏப்ரல் மாதம் கடைசி வாரம் தொடங்கிவிட்டது. தற்போது காற்றாலைகள் மூலம் மின்சார உற்பத்தி உச்சத்தில் இருக்கிறது.

இதுகுறித்து எரிசக்தி துறை அதிகாரிகள் கூறியதாவது:-

காற்றலை மின்உற்பத்தி அதிகரித்து இருப்பதால் தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் தடையற்ற மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. சராசரியாக தற்போது 3 ஆயிரத்து 800 முதல் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

வீடுகளி்ல் அறைகளில் பயன்படுத்தப்படும் ஏசியின் பயன்பாடு காலநிலை மாற்றத்தால் குறைந்து உள்ளது. மின்சாரத்தின் தேவையும் சற்று குறைந்து இருப்பதால் அனல் மின்சார நிலையங்களில் நிலக்கரியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்சார உற்பத்தி குறைக்கப்பட்டு உள்ளது. காற்றாலை மின்சாரம் முழு அளவில் பயன்படுத்தப்படுகிறது.

அதேபோல், சூரியசக்தி மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்றாலைகளின் அதிகமான மின் உற்பத்தி காரணமாக தமிழகத்தின் மின்தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Next Story