தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டோர் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது


தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டோர் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது
x
தினத்தந்தி 28 July 2021 3:28 AM GMT (Updated: 28 July 2021 3:28 AM GMT)

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டோரின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளது.

சென்னை,

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் தொடங்கியது. தமிழகத்தில் முதல் முறையாக சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு மட்டும் ஜனவரி 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

இதைத்தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து கடந்த மே மாதம் 1-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி இந்தியா முழுவதும் தொடங்கியது. இருந்தபோதிலும், தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால், மே 20-ந்தேதி முதலே 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

தொடக்கத்தில் மந்தம்

தமிழகத்தில் முதலில் தடுப்பூசி போடும் பணி மிகவும் மந்தமாகவே இருந்தது. பின்னர் தொடர் விழிப்புணர்வு காரணமாக தடுப்பூசி போடும் பணி அதிகரித்தது.

அந்தவகையில் தமிழகத்தில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் பிப்ரவரி 27-ந்தேதி வரை 4 லட்சத்து 57 ஆயிரத்து 951 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். ஆனால் மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்தது. கடந்த மார்ச் 31-ந்தேதி நிலவரப்படி தமிழகத்தில் 30 லட்சத்து 31 ஆயிரத்து 631 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

2 கோடியை தாண்டியது

இதைத்தொடர்ந்து ஜூன் மாதத்தில் கொரோனா தடுப்பூசி போட்டோரின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது. இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் தடுப்பூசி போட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே 79 ஆயிரத்து 887 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1 கோடியே 73 லட்சத்து 25 ஆயிரத்து 995 பேர் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியும், 27 லட்சத்து 53 ஆயிரத்து 892 பேர் ‘கோவேக்சின்’ தடுப்பூசியும் போட்டுள்ளனர். அதில் 60 வயதுக்கு மேற்பட்ட 37 லட்சத்து 22 ஆயிரத்து 275 பேரும், 45 முதல் 60 வயதுக்கு உட்பட்ட 66 லட்சத்து 706 பேரும், 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்ட 77 லட்சத்து 54 ஆயிரத்து 667 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்து 81 ஆயிரத்து 766 பேர் தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story