தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க கடுமையாக உழைப்போம் - அண்ணாமலை பேட்டி


தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க கடுமையாக உழைப்போம் - அண்ணாமலை பேட்டி
x
தினத்தந்தி 28 July 2021 8:39 PM GMT (Updated: 28 July 2021 8:39 PM GMT)

கிராமம்தோறும் கட்டமைப்பை வலுப்படுத்தி தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க கடுமையாக உழைப்போம் என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

மணவாளக்குறிச்சி,

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று குமரி மாவட்டம் வந்தார். அங்கு வெள்ளிமலை ஸ்ரீவிவேகானந்த ஆசிரமம் சென்று சுவாமி சைதன்யானந்தஜி மகராஜை சந்தித்து ஆசி பெற்றார்.

இதனை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மாநில பா.ஜ.க. தலைவராக பதவியேற்ற பிறகு முதன் முதலாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. குமரி மாவட்டத்தில் பா.ஜ.க. உள் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. இந்த உள் கட்டமைப்பை தமிழ்நாடு முழுவதும் நீட்டித்து கட்சி பலப்படுத்தப்படும். வருகிற 2026-ல் நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க கடுமையாக உழைப்போம். 13 ஆயிரம் கிராமங்களில் கட்சி உள் கட்டமைப்பை தயார்படுத்துவோம்.

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது. முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு புதிய பொறுப்பு அளிக்கப்படும். கட்சியில் இளைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். ஆகஸ்டு 22 மற்றும் செப்டம்பர் 20-ந் தேதி குமரி மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மீண்டும் வருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story