வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு: டாக்டர் ராமதாசுக்கு 31-ந்தேதி பாராட்டு விழா


வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு: டாக்டர் ராமதாசுக்கு 31-ந்தேதி பாராட்டு விழா
x

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக கடந்த பிப்ரவரி 26-ந் தேதி நிறைவேற்றப்பட்ட சிறப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது.வன்னிய மக்களின் வாழ்வில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தவிருக்கும் இந்தச் சட்டம் இயற்றப்பட்டு, நடைமுறைக்கு வருவதற்கு முழு முதல் காரணமாக இருந்த டாக்டர் ராமதாசுக்கு பா.ம.க., வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட இந்த கோரிக்கைக்காக குரல் கொடுத்து வந்த அனைத்து அமைப்புகளின் சார்பில் உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை வென்றெடுத்துக் கொடுத்த டாக்டர் ராமதாசுக்கு பிரமாண்டமான பாராட்டு விழா நடத்தப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் விரும்புகின்றனர். ஆனாலும், கொரோனா ஊரடங்கு சூழலில் அத்தகைய விழா தவிர்க்கப்பட வேண்டும் என்பதால் பாட்டாளி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பா.ம.க., வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் ஆகிய 3 அமைப்புகளும் இணைந்து டாக்டர் ராமதாசுக்கு இணையவழியில் (ஆன்லைன் மூலம்) பாராட்டு விழா நடத்த தீர்மானித்துள்ளன.

வரும் 31-ந்தேதி மாலை 5 மணிக்கு எனது தலைமையில் நடைபெறும் இந்த பாராட்டு விழாவிற்கு வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, சமூக முன்னேற்ற சங்கத் தலைவர் சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பா.ம.க.வின் இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பிற மூத்த தலைவர்களும் சிறப்புரையாற்றுகின்றனர். டாக்டர் ராமதாஸ் ஏற்புரையாற்றுகிறார். இந்த விழாவில் பா.ம.க. மற்றும் அதன் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் இணைய வழியில் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story