கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 July 2021 10:23 AM GMT (Updated: 29 July 2021 10:23 AM GMT)

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை, 

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இதுதொடர்பாக.சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில், “இன்றும், நாளையும் (ஜூலை29, 30ஆம் தேதி) கோவை, நீலகிரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.

நாளை மறுநாள் (ஜூலை 31ஆம் தேதி) கோவை, நீலகிரி மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்

ஆக.,1 மற்றும் 2ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும். 

சென்னையை பொறுத்த வரைஅடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, புதுக்கோட்டை, தேனி மாவட்டம் பெரியாறு, சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை, நீலகிரி மாவட்டம் தேவாலா, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் தலா 2 செ.மீ.,கோவை மாவட்டம் சின்னக்கல்லார், வால்பாறை மற்றும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தலா 1 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

இன்று (ஜூலை 29) மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். இன்றும் நாளையும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்திலும் இடைஇடையே 65 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.

ஜூலை 29 முதல் ஆக.,2ஆம் தேதி வரை தென் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story