அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்- எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளில் வழக்கு


அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்- எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளில் வழக்கு
x
தினத்தந்தி 29 July 2021 11:50 AM GMT (Updated: 29 July 2021 11:50 AM GMT)

அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் தங்கள் வீடுகள் முன்பும், அரசு அலுவலகங்கள் முன்பும் திரண்டு பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

சென்னை

தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் அ.தி.மு.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் தங்கள் வீடுகள் முன்பும், அரசு அலுவலகங்கள் முன்பும் திரண்டு பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அ.தி.மு.க.. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லம் முன்பு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்

அ.தி.மு.க.வினரின் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு உரிய அனுமதி பெறவில்லை என்றும், கொரோனா நோய்த்தொற்று பரவும் வகையில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறி போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் 90 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், பேரிடர் காலத்தில் கூடுதல், கொரோனா பரவ காரணமாக இருத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சேலம் மாநகர பகுதியில் 19 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மொத்தம் சுமார் 1,500 பேர் மீதும், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புறநகர் பகுதியில் 5 ஆயிரத்து 200 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story