சட்டமன்ற நூற்றாண்டு விழா குறித்து கருத்து: ஜெயக்குமாருக்கு, அமைச்சர் எ.வ.வேலு கண்டனம்


சட்டமன்ற நூற்றாண்டு விழா குறித்து கருத்து: ஜெயக்குமாருக்கு, அமைச்சர் எ.வ.வேலு கண்டனம்
x
தினத்தந்தி 30 July 2021 1:51 AM GMT (Updated: 30 July 2021 1:51 AM GMT)

சட்டமன்ற நூற்றாண்டு விழா குறித்து கருத்து தெரிவித்திருந்த ஜெயக்குமாருக்கு அமைச்சர் எ.வ.வேலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

இதுகுறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘தமிழ்நாடு சட்டமன்றத்தில் கருணாநிதியின் உருவப்படம் திறப்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் விழா கொண்டாட வேண்டும் என்பதற்காக வரலாற்றை மாற்றக்கூடாது’, என்று முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். சபாநாயகராக இருந்தவருக்கு வரலாறு தெரியாதது வருத்தமளிக்கிறது.

1919-ம் ஆண்டில் மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்களின் அடிப்படையில் தேர்தல் நடைபெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அந்நாளைய மாகாண சட்டமன்றங்களில் முதன் முதலாக இடம்பெற தொடங்கினர். சென்னை மாகாண மன்றத்துக்கு 1920-ம் ஆண்டு நவம்பர் 30-ந்தேதி நிகழ்ந்த பொதுத் தேர்தலில் நீதிக்கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி, சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைச்சரவை பொறுப்பேற்றது. 1921-ம் ஆண்டு ஜனவரி 12-ந்தேதி கன்னாட் கோமகனால் முதல் மாகாண சுயாட்சி சட்டமன்றம் தொடங்கி வைக்கப்பட்டது. பனகல் ராஜா, டாக்டர் பி.சுப்பராயன், முனுசாமி நாயுடு, பொப்பிலி ராஜா, பி.டி.ராசன், குர்மா வெங்கடரெட்டி நாயுடு என நீதிக்கட்சியின் முதல்-அமைச்சர்கள் 17 ஆண்டு காலம் பதவி வகித்தார்கள்.

மேற்கண்டோரில் ஒருவரான டாக்டர் பி. சுப்பராயனுடைய ஆட்சிக்காலத்தில் இடஒதுக்கீடு வழங்கி, அரசாணை அமல்படுத்தப்பட்டது. எனவேதான், டாக்டர் பி.சுப்பராயனின் உருவப் படம் சட்டசபையில் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் 23.3.1947 முதல் 6.4.1949 வரை ஓ.பி. ராமசாமி ரெட்டியார் முதல்-அமைச்சராக இருந்தபோது, நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது. எனவே, அவருடைய உருவப் படமும் சட்டசபையில் திறந்து வைக்கப்பட்டது. ஆகவே தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட சட்டமன்ற வரலாறு 1921-ம் ஆண்டே தொடங்கி விட்டது.

1-4-1921 அன்று நீதிக்கட்சி ஆண்ட காலத்தில்தான் வாக்காளர் பட்டியலில் பெண்களும் இடம்பெறும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1989-ம் ஆண்டு கருணாநிதியால் கொண்டாடப்பட்ட பொன்விழா பற்றி ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார். அப்போது ஒரு மலர் வெளியிடப்பட்டது. அந்த மலரில் கருணாநிதி எழுதிய அணிந்துரை இடம் பெற்றுள்ளது. அதில் அவர், ‘தமிழ்நாடு சட்டசபைக்கு வயது இன்று 52’ என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்.

டி.ஜெயக்குமார், தமிழக சட்டசபையில் சபாநாயகராக இருந்தவர், சட்டப் பேரவைக்கும், சட்டமன்ற பேரவைக்கும் உள்ள வேறுபாடு அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். 1937-ம் ஆண்டில் மதராஸ் மாகாண சட்டமன்றம், சட்டமன்ற மேலவையாகவும், வாக்குரிமை பெற்ற வயது வந்த அனைத்து மக்களாலும் நேரிடையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை கொண்ட சட்டப்பேரவையாகவும் செயல்படும் முறை பிறந்தது என்பதன் அடிப்படையில் 1989-ம் ஆண்டில் சட்டசபையின் பொன்விழா கொண்டாடப்பட்டது.

1997-ம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்ற பவளவிழா மற்றும் சட்டமன்ற பேரவை வைரவிழா கருணாநிதியால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழா கொண்டாடும் நோக்கத்துக்காக வரலாற்றை மாற்றி எழுதக்கூடாது என ஜெயக்குமார் கூறியிருக்கிறார். எதற்காக மாற்றி எழுத வேண்டும்? நூற்றாண்டு விழாவின் முக்கியத்துவத்தை உணர்ந்த காரணத்தால்தான் ஜனாதிபதியும், கவர்னரும் பங்கு பெறுவதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.

ஜெயக்குமார் சொன்னதுபோல, மக்களை முட்டாளாக்கும் முயற்சியில் நாங்கள் செயல்படவில்லை, அனைவரையும் அறிவாளிகளாக்கும் முயற்சியில்தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. ஜெயக்குமார் அமைச்சராக இருந்தபோதும் ஒருவருக்கும் புரியாத கருத்தை பேரவையில் சொல்லிவிட்டு உட்கார்ந்து விடுவார். அப்போதெல்லாம் நாங்கள் அவருடைய பேச்சை ‘காமெடி’ (நகைச்சுவை) யாகத்தான் எடுத்துக்கொள்வோம்.

சபாநாயகராக பணியாற்றிய இவரை பதவியேற்ற ஓராண்டிலேயே ஜெயலலிதா பதவியை விட்டு நீக்கியது ஏன்? என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இதன்மூலம் அவர் தன்னுடைய அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுபோன்ற உண்மைக்கு மாறான கருத்துகளை திரித்து கூறுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story