நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
நெல்லையில் கட்டப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
சென்னை,
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகங்களில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் முதல்முறையாக திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்குப் புதிய கட்டடம் 3,282 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலாளர் ஆர்.லால்வேனா, மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகம், இளம் சிறார்களுக்கான காதுகேளாதோர் பயிற்சி மையம், உதவி உபகரணங்கள் வழங்கும் பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்தளம், சிறப்புக் கழிவறை உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பாளையாங்கோட்டையில் 70 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவிலும், மதுரை ரெயில் நிலையம் அருகே 86 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்துடன் கூடிய மைய கட்டிடங்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.
Related Tags :
Next Story