ஆக்கிரமிப்பு கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை


ஆக்கிரமிப்பு கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை
x
தினத்தந்தி 31 July 2021 4:37 PM GMT (Updated: 31 July 2021 4:37 PM GMT)

தமிழகம், புதுவையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

தமிழகம், புதுவையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
செயற்குழு கூட்டம்
இந்து முன்னணி தமிழ்நாடு-புதுவை மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் நேற்று புதுச்சேரி சித்தன்குடியில் உள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு புதுச்சேரி மாநில தலைவர் சனில் குமார் தலைமை தாங்கினார். தமிழக மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் 50-க்கும் மேற்பட்ட கோவில் நிலங்களில் மதுக்கடைகள், சாராயக்கடைகள் உள்ளன. தமிழகத்தில் இந்து கோவில்களுக்கு சொந்தமான 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக அறிக்கை சொல்கிறது. தமிழகம், புதுச்சேரியில் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயங்கரவாதத்துக்கு வித்திடும்
தமிழகத்தில் இந்து கோவில்களை மட்டும் இடிக்கின்றனர். இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இந்து கோவில்களில் இருந்து வரும் வருமானத்தை கோவில் திருவிழா, கும்பாபிஷேகங்களுக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும் என ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது. இதை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும்.
வங்காள தேசத்தை சேர்ந்த பலர் சட்டவிரோதமாக தமிழ்நாட்டில் தங்கியுள்ளனர். போலியாக ஆதார் கார்டும் வாங்கியுள்ளனர். சமீபத்தில் கூட திருப்பூரில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில் அது தமிழகம், புதுவையில் பயங்கரவாதத்துக்கு வித்திடும்.
விநாயகர் சதுர்த்தி
உளவுத்துறையில் சிறப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும். ஒரு சில இயக்கங்களால் பயங்கரவாத செயல்களை பெருகி வருகிறது. அந்த இயக்கங்களை தடை செய்ய வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி விழாவை இந்த ஆண்டு வெகு விமரிசையாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தில் 1 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களிலும், புதுச்சேரியில் 500-க்கும் மேற்பட்ட இடங்களிலும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்துள்ளோம். பிரதமர் மோடியை பற்றி அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story