சென்னையில் கஞ்சா கடத்தல்: வருமான வரி அதிகாரியின் கார் டிரைவருக்கு வலைவீச்சு பெண் உள்பட 2 பேர் கைது


சென்னையில் கஞ்சா கடத்தல்: வருமான வரி அதிகாரியின் கார் டிரைவருக்கு வலைவீச்சு பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 Aug 2021 12:37 AM GMT (Updated: 2 Aug 2021 12:37 AM GMT)

சென்னையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட வருமான வரி அதிகாரியின் கார் டிரைவரை போலீசார் தேடிவருகிறார்கள். இது தொடர்பான வழக்கில் பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னை சூளைமேடு போலீசார் சமீபத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கூலிப்படை கும்பலைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த கும்பலோடு தொடர்பில் உள்ள கஞ்சா கடத்தல் கும்பலை வேட்டையாடி பிடிக்க இணை கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். துணை கமிஷனர் பகலவன், உதவி கமிஷனர் ரவி ஆகியோர் மேற்பார்வையில், சூளைமேடு இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் தொடர்புள்ள அரும்பாக்கம் முருகன் (வயது 25), கொரட்டூரைச் சேர்ந்த வாணி (34) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கொரட்டூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் வீட்டில் போலீசார் சோதனை போட்டனர். அங்கு 15 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அது பறிமுதல் செய்யப்பட்டது.

ஆனால் பிரகாஷ் போலீஸ் கையில் சிக்காமல் தப்பி ஓடிவிட்டார். அவர் சென்னையில் வருமான வரி அதிகாரி ஒருவரிடம் ஒப்பந்த அடிப்படையில் கார் டிரைவராக வேலை பார்த்துவந்தார். அவர் ஓட்டிய காரும் ஒப்பந்த அடிப்படையிலான கார் ஆகும். அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

வருமான வரி அதிகாரி பயன்படுத்தும் கார் என்பதால், போலீசார் சந்தேகப்பட மாட்டார்கள் என்று அந்த காரை கஞ்சா கடத்த பிரகாஷ் பயன்படுத்தினாரா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். பிரகாசை கைது செய்ய தேடி வருகிறார்கள்.

Next Story