சட்டசபையில் கருணாநிதி படத்திறப்பு விழா: அ.தி.மு.க. புறக்கணிப்பு


சட்டசபையில் கருணாநிதி படத்திறப்பு விழா: அ.தி.மு.க. புறக்கணிப்பு
x
தினத்தந்தி 3 Aug 2021 1:17 AM GMT (Updated: 3 Aug 2021 1:17 AM GMT)

தமிழக சட்டசபையில் கருணாநிதி படத்திறப்பு விழாவை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. புறக்கணித்தது.

சென்னை, 

தமிழக சட்டசபையில் சட்டசபை நூற்றாண்டு விழா மற்றும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்பட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கருணாநிதியின் படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியை அ.தி.மு.க. புறக்கணித்துவிட்டது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக விழா மேடையின் இடது பக்கம் உள்ள முதல் வரிசை முழுவதையும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்காக ஒதுக்கி இருந்தனர். அந்த வரிசையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா சீக்கிரமாகவே வந்து அமர்ந்தார்.

முதல் வரிசையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

அ.தி.மு.க. கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பின் வரிசையில் அமர்ந்திருந்தார். அதுபோல காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசர், கார்த்தி சிதம்பரம், சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் பின்வரிசையில் அமர்ந்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கட்சியின் கூட்டணியில் உள்ள பா.ஜ.க., பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் பங்கேற்றது வியப்பை ஏற்படுத்தியது. விழாவிற்கான அழைப்பிதழ், தே.மு.தி.க.விற்கும் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்தக் கட்சித் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

Next Story