திருமணமான 2 நாளில் கல்லூரி மாணவி கொன்று எரிப்பு கட்டாயத்தாலி கட்ட வைத்ததால் கணவர் வெறிச்செயல்


திருமணமான 2 நாளில் கல்லூரி மாணவி கொன்று எரிப்பு கட்டாயத்தாலி கட்ட வைத்ததால் கணவர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 8 Aug 2021 5:25 AM GMT (Updated: 8 Aug 2021 5:25 AM GMT)

காதலிக்கும் போதே கர்ப்பம் அடைந்த கல்லூரி மாணவி, திருமணம் செய்து வைக்கப்பட்ட 2 நாளில் கொன்று எரிக்கப்பட்டார். கட்டாய தாலி கட்ட வைத்ததால் இந்த வெறிச்செயலை செய்ததாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை,

மதுரை சோழவந்தான் அருகே உள்ள ராயபுரத்தை சேர்ந்த சகாயராஜ்- செல்வமேரி தம்பதியின் மகள் கிளாடிஸ்ராணி (வயது 21). இவர் மதுரை அருகே உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் அவனியாபுரத்தை சேர்ந்த சோலைமலை என்பவருடைய மகன் ஜோதிமணியும் (22) காதலித்து வந்துள்ளனர். இருவரும் தனிமையில் சந்தித்து வந்த நிலையில் கிளாடிஸ்ராணி கர்ப்பம் அடைந்தார். இதையறிந்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் ஜோதிமணியிடம் தனது மகளை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளனர். அவர் மறுப்பு தெரிவிக்கவே கடந்த 2-ந்தேதி கிளாடிஸ்ராணியின் உறவினர்கள் ஜோதிமணிக்கும், கிளாடிஸ்ராணிக்கும் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள கோவிலில் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். அப்போது பெண்ணின் பெற்றோர், உறவினர்கள், போலீசார் இருந்துள்ளனர். ஜோதிமணி தரப்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை. அன்றிரவு ஜோதிமணி சோழவந்தானில் தங்கி இருந்தார்.

இந்தநிலையில், 4-ந்தேதி ஜோதிமணி, தனது மனைவி கிளாடிஸ்ராணியை தன் பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என கூறி அவனியாபுரத்திற்கு மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். சில மணி நேரம் கழித்து கிளாடிஸ்ராணியின் பெற்றோரை தொடர்பு கொண்ட ஜோதிமணி, ‘‘கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற உங்கள் மகள் வேறு ஒருவருடன் சென்றுவிட்டார்’’ என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கிளாடிஸ்ராணியின் குடும்பத்தினர், சோழவந்தான் போலீசில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில் ஜோதிமணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதாவது, கிளாடிஸ்ராணியை அவர் மோட்டார்சைக்கிளில் அவனியாபுரம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் காட்டுப்பகுதியில் உள்ள முட்புதர் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து தன்னை விட்டு சென்று விடும்படி மிரட்டியுள்ளார். ஆனால், கிளாடிஸ்ராணி அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஜோதிமணி அவரை தாக்கி துப்பட்டாவை பறித்து, அதன் மூலம் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். கொலையை மறைக்க மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை எடுத்து ஊற்றி உடலை எரித்துள்ளார். பின்னர் கிளாடிஸ்ராணி வேறு ஒருவருடன் சென்றுவிட்டார் என அவரின் குடும்பத்தினரிடம் தெரிவித்து நாடகம் ஆடியது அம்பலமானது.

இதை தொடர்ந்து ஜோதிமணியை நேற்று அவனியாபுரத்தில் அவர் கூறிய காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு எரிந்த நிலையில் பெண்ணின் உடல் கிடந்தது. அதனை மீட்ட அவனியாபுரம் போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜோதிமணியை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story