மதுரையில் சாலை விபத்து: 3 பேர் உயிரிழந்த பரிதாபம்


மதுரையில் சாலை விபத்து:  3 பேர் உயிரிழந்த பரிதாபம்
x
தினத்தந்தி 8 Aug 2021 4:32 PM GMT (Updated: 8 Aug 2021 4:32 PM GMT)

மதுரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.



மதுரை,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் காசிமணி (வயது 46). இவர் தனது மனைவி ராமு களஞ்சியம், மகன் ராகுல், மருமகன் தலைமலை, உறவினர் கௌதம் மற்றும் ஓட்டுனர் என குடும்பத்துடன் மதுரைக்கு சென்று விட்டு மீண்டும் கோவிலூருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அவர்களது கார் திருமங்கலம் அருகே டி.புதுப்பட்டி வழியே சென்று கொண்டிருந்தபோது நிலைதடுமாறி எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.  இதில், எதிரே வந்த காரானது ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை நோக்கி வந்துள்ளது.

இந்த விபத்தில் இந்த காரில் சென்ற மதுரை கே.புதூரை சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஜுபுதீன் (வயது 45) என்பவர், ஓட்டுனர் மற்றும் ஒருவர் என மொத்தம் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதேபோன்று, காசிமணியின் குடும்பத்தினர் மற்றும் அவரது கார் ஓட்டுநர் என ஆறு பேரும் படுகாயமடைந்து முதலுதவி சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story