துணி காயபோட்ட போது மின்சாரம் தாக்கி தாய், மகள், பேத்தி பலி


துணி காயபோட்ட போது மின்சாரம் தாக்கி தாய், மகள், பேத்தி பலி
x
தினத்தந்தி 8 Aug 2021 10:12 PM GMT (Updated: 8 Aug 2021 10:12 PM GMT)

துணியை காயபோட்ட போது மின்சாரம் தாக்கி தாய், மகள், பேத்தி என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பிச்சுமணி, கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி இந்திரா (வயது 52). இவர்களின் மகள் மகாலட்சுமி (25). இவருக்கும், மிட்டப்பள்ளியை சேர்ந்த சிவா என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 3 வயதில் அவந்திகா என்ற பெண் குழந்தை இருந்தது.

மகாலட்சுமி, தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை இந்திரா தனது பேத்தி அவந்திகாவை இடுப்பில் வைத்துக்கொண்டு ஈரத்துணிகளை காய போட்டுக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் மேல் பகுதியில் சென்ற மின்சார கம்பி துணியில் பட்டு பாட்டி, பேத்தி மீது மின்சாரம் பாய்ந்தது.

3 பேர் பலி

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு மகாலட்சுமி ஓடி வந்து 2 பேரையும் காப்பாற்ற முயன்றார். இதில் அவரையும் மின்சாரம் தாக்கியது. 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அங்கு தாய், மகள், பேத்தி ஆகிய 3 பேரும் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்த போலீசார் மின்சாரம் தாக்கி இறந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மின்சாரம் தாக்கியது எப்படி?

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பலியான இந்திரா குடியிருந்து வந்த வீடு 1972-ம் ஆண்டு கட்டப்பட்ட தொகுப்பு வீடு ஆகும். அந்த வீட்டில் பராமரிப்பு பணிகள் எதுவும் செய்யாததால் மின் கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் இருந்தது. மேலும் வீட்டில் மின்சார வயர்கள் அறுந்து ஆங்காங்கே ‘செலோடேப்பால்’ ஒட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் மழை பெய்ததால் வீட்டின் சுவர் ஈரமாக காணப்பட்டுள்ளது. அப்போது அந்த கம்பிகளில் மின்சாரம் பாய்ந்துள்ளது. ஈரத்துணிகளை காய போட்டபோது, கம்பி மீது துணி படவே இந்திரா உள்பட 3 பேரும் மின்சாரம் தாக்கி இறந்தது தெரிய வந்துள்ளது.

Next Story