சென்னை வங்கியில் நடந்த ரூ.100 கோடி மோசடி வழக்கில் 9 பேர் கைது சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை


சென்னை வங்கியில் நடந்த ரூ.100 கோடி மோசடி வழக்கில் 9 பேர் கைது சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 11 Aug 2021 1:03 AM GMT (Updated: 11 Aug 2021 1:03 AM GMT)

சென்னையில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்த 100 கோடி பணத்தை நூதனமாக மோசடி செய்த வழக்கில் 9 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னை துறைமுக சபை சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள இந்தியன் வங்கியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.100 கோடி டெபாசிட் செய்யப்பட்டது. அந்த டெபாசிட் பணம், அந்த வங்கி கணக்கில் இருந்து, போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, கணேஷ் நடராஜன் என்பவரின் வங்கி கணக்கிற்கு நூதனமான முறையில் மாற்றப்பட்டுள்ளது. கணேஷ் நடராஜன் தன்னை சென்னை துறைமுகத்தின் நிதி பிரிவு துணை இயக்குனர் என்று கூறிக்கொண்டு அதற்கான ஆவணங்களையும் வங்கியில் சமர்ப்பித்து, அதே வங்கியில் புதிய கணக்கு ஒன்றை தொடங்கி, ரூ.100 கோடியை அந்த புதிய கணக்கிற்கு மாற்றி, அதில் இருந்து ரூ.45 கோடி எடுத்து ஏப்பம் போட்டு விட்டதாக புகார் எழுந்தது.

இந்தியன் வங்கியின் உயர் அதிகாரிகள் இந்த மோசடி பற்றி கண்டுபிடித்து விட்டனர். கோயம்பேடு இந்தியன் வங்கியின் அப்போதைய மேலாளரின் துணையோடுதான் இந்த நூதன மோசடி அரங்கேறி இருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது. இந்தியன் வங்கியின் உயர் அதிகாரிகள் தலையீட்டின் பேரில், வங்கி கணக்கில் மீதி இருந்த ரூ.55 கோடியை முடக்கி விட்டனர்.

அதிரடி சோதனை

இந்த மெகா மோசடி குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் முதலில் புகார் கொடுக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் இது குறித்து பூர்வாங்க விசாரணை நடத்தினார்கள். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

சி.பி.ஐ. போலீசாரும் குறிப்பிட்ட இந்தியன் வங்கியின் மேலாளர் சேர்மதிராஜா மற்றும் பணத்தை சுருட்டியதாக புகார் கூறப்பட்ட கணேஷ் நடராஜன், இடைத்தரகர் மணிமொழி உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக சென்னையில் 3 இடங்களில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

9 பேர் கைது

இதற்கிடையில் இந்த வழக்கில் நேற்று 9 பேரை கைது செய்து சி.பி.ஐ. போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர் 9 பேரில் ஒருவர் நெல்லையில் கைது செய்யப்பட்டு, சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். மற்ற 8 பேரும் சென்னையில் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கைதான 9 பேர் பெயர் விவரம் வருமாறு:-

1 .கணேஷ் நடராஜன்-இவர்தான் முக்கிய குற்றவாளி. 2. மணிமொழி-சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர். இடைத்தரகர். 3. செல்வகுமார் என்ற செல்வம்.

4.ஜாகீர்உசேன். 5.விஜய்ஹெரால்டு. 6.ராஜேஷ்சிங். 7.ஸ்ரீசியாத். 8.அப்சர். 9.சுடலைமுத்து என்ற அண்ணாச்சி.

சொத்துகளில் முதலீடு

மோசடி செய்த ரூ.45 கோடியை பல்வேறு சொத்துகளில் முதலீடு செய்துள்ளது சி.பி.ஐ. விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த சொத்துகளை முடக்குவதற்கு சி.பி.ஐ. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Next Story