கேரளா சென்ற ரெயிலில் போலி என்ஜின் டிரைவர்கள் 2 பேர் சிக்கினர் சுதந்திர தினத்தையொட்டி சதி வேலையில் ஈடுபட திட்டமா? போலீஸ் விசாரணை


கேரளா சென்ற ரெயிலில் போலி என்ஜின் டிரைவர்கள் 2 பேர் சிக்கினர் சுதந்திர தினத்தையொட்டி சதி வேலையில் ஈடுபட திட்டமா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 15 Aug 2021 4:09 AM GMT (Updated: 15 Aug 2021 4:09 AM GMT)

மேற்கு வங்காளத்தில் இருந்து கேரளா சென்ற ரெயிலில் சேர்ந்த போலி ரெயில் என்ஜின் டிரைவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டார்கள். சுதந்திர தினத்ததையொட்டி சதி வேலையில் ஈடுபட திட்டமிட்டார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு,

மேற்கு வங்காளத்தில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் சாலிமர் ரெயில் கடந்த 2 நாட்களுக்கு முன், ஈரோடு ரெயில் நிலையம் வந்தபோது, ரெயில்வே பாதுகாப்பு போலீசார் அந்த ரெயிலில் திடீர் சோதனை மேற்கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் சோதனை செய்தபோது, ரெயில்வே பைலட் சீருடையில் 2 வாலிபர்கள் இருந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, தாங்கள் 2 பேரும் ரெயில் என்ஜின் டிரைவர்கள் என்று கூறி உள்ளனர்.

போலி அடையாள அட்டை

ஆனால் அவர்களது அடையாள அட்டையை பார்த்த போது அது போலியானது என்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஹரிராம்பூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது வாலிபர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த அப்துல்ரசாக் மகன் எஸ்ராபில்ஷேக் (21) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. இதில் 17 வயது வாலிபர் கடந்த 2 ஆண்டுகளாக ரெயில் என்ஜின் டிரைவராக போலியாக பணியாற்றி வந்துள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது. இதையடுத்து இருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கூறியதாவது:-

பிடிபட்ட 2 பேரும் மேற்குவங்காள மாநிலத்தில் உள்ள கடைகோடி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் வசிக்கும் கிராமத்திற்கும், வங்காளதேச நாட்டிற்கும் 10 கிலோ மீட்டர் தூரம் தான் உள்ளது.

2 பேர் கைது

உண்மையான என்ஜின் டிரைவருக்கு பதிலாக 17 வயது வாலிபர் போலியாக பணியாற்றி வந்ததும், இதற்காக மாதம் ரூ.25 ஆயிரம் வரை உண்மையான என்ஜின் டிரைவரிடம் சம்பளம் பெற்று வந்ததாகவும் தெரிவித்துள்ளார். எஸ்ராபில்ஷேக் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் 17 வயது வாலிபரிடம் இணைந்துள்ளார். ஆனால் அவர் இதுவரை ரெயில் ஓட்டியது இல்லை என்று தெரிவித்துள்ளார். பின்னர் கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

நாசவேலைக்கு திட்டமா?

கைது செய்யப்பட்டவர்கள் வங்கதேச நாட்டின் எல்லைக்கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சுதந்திர தினத்தையொட்டி நாச வேலையில் ஈடுபடும் நோக்கில் வந்தார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே கைது செய்யப்பட்டவர்களிடம் பெறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், தனிப்படை அமைக்கப்பட்டு மேற்குவங்காள மாநிலம் சென்று விசாரணை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

குறிப்பாக பணி வழங்கியதாக தெரிவித்துள்ள ரெயில் என்ஜின் டிரைவர்கள் 2 பேரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் தான் முழு விபரமும் தெரியவரும்.

இவ்வாறு ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கூறினர்.

Next Story