பிரதமரும், ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சரும் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்: பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்


பிரதமரும், ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சரும் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்: பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
x
தினத்தந்தி 19 Aug 2021 9:04 AM GMT (Updated: 19 Aug 2021 9:14 AM GMT)

பெட்ரோலின் விலை ரூ.3 குறைத்ததிலிருந்து விற்பனை அதிகரித்துள்ளது: அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

சென்னை

2021-22 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்  மற்றும் வேளாண் பட்ஜெட்  மீதான 4 ம் நாள் விவாதம் மற்றும் பதிலுரை இன்று நடைபெற்று வருகிறது.  இதில் பேசிய நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:-

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை சராசரியாக ஒருநாள் பெட்ரோல் விற்பனை 9,180 கிலோ லிட்டர் விற்பனையானது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை சராசரியாக ஒரு நாள் பெட்ரோல் விற்பனை 10,317 கிலோ லிட்டர்  விற்பனையாகியுள்ளது. பெட்ரோல் விலைகுறைப்பால் மக்கள் நேரடியாக பயனடைந்துள்ளார்கள்.

பெட்ரோல் விலை குறைப்புக்கு பிறகு நாள் ஒன்றுக்கு 11.28 லட்சம் லிட்டர் பெட்ரோல் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்ததனால் 12 சதவிகிதம் விற்பனை அதிகரித்துள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடி ஒன்றிய அரசிற்கு கிடைக்கும். இதற்கு பிரதமரும், ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சரும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

எதிர்க்கட்சியாக இருந்த போது நான் சுட்டிக்காட்டிய பிரச்சினைகளை ஆளுங்கட்சி அமைச்சராக வந்த பிறகும் என்னால் தீர்க்க முடியவில்லை என்பது எனக்கு வேதனையாக இருக்கிறது, சில நேரங்களில் எனக்கு அச்சமாகவும் இருக்கிறது.

தமிழகத்தில் பெட்ரோல் விலையை ரூ.3 குறைத்த பின், ஒரு நாளைக்கு 11.28 லட்சம் லிட்டர் பெட்ரோல் விற்பனை அதிகரித்துள்ளது கடந்த ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்களின் நிலை குறித்து இந்த கூட்டத்தொடரில் அறிக்கை வெளியிடப்படும்.

நந்தனத்தில் உள்ள நிதித்துறை வளாகத்திற்கு தமிழ்நாட்டின் முன்னாள் நிதியமைச்சராக பணியாற்றிய பேராசியர் க.அன்பழகன் பெயர் சூட்டப்படும்.

அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டின் சுயவருமானம் ரூ. 90,000 கோடி குறைந்து உள்ளது.கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டின் வருவாய் இழப்பு ரூ.4 லட்சம் கோடி

 110 விதியின் அடிப்படையில் கடந்த பத்து வருடங்களில் எத்தனை அறிவிப்புகள் வெளியிடப்பட்டது அதில் எத்தனை செயல்படுத்தப்பட்டது? அதற்கு நிதி எங்கிருந்து வந்தது ? எப்படி செலுத்தப்பட்டது என்பது குறித்து ஒரு ஆய்வு நடத்தி இந்த கூட்டத்தொடரிலேயே அவை முன் அறிக்கை வைக்கப்படும். இதேபோல பல துறைகளில் ஆய்வு செய்ய உள்ளோம். இது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என அவர் கூறினார்.

Next Story