மோசடிகளை தடுக்க இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்


மோசடிகளை தடுக்க இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 20 Aug 2021 9:04 PM GMT (Updated: 20 Aug 2021 9:04 PM GMT)

வேலை வாங்கி தருவதாக கூறி நடைபெறும் மோசடிகளைத் தடுக்கவும், வேலைவாய்ப்பின்மை பிரச்சினையை சமாளிக்கவும் மத்திய, மாநில அரசுகள் இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு யோசனை தெரிவித்துள்ளது.

சென்னை,

தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளர் பணிக்கு நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும்படி 2017-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதனுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. இதுகுறித்து, தாமாக முன்வந்து சென்னை ஐகோர்ட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி., சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது பாரதிராஜா என்ற என்ஜினீயரிங் பட்டதாரி தன்னிடம் பணம் பறிக்க முயற்சித்த போலி நிறுவனத்தை மாட்டி விடுவதற்காக, நீதிபதியின் முகவரி மற்றும் மொபைல் எண்ணை கொடுத்தது தெரியவந்தது.

80 பேரிடம் மோசடி

இதுகுறித்து போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘80 பேரிடம் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.9 லட்சத்து 28 ஆயிரத்து 850-ஐ இந்த நிறுவனம் மோசடி செய்துள்ளது. இது சம்பந்தமாக சித்ரா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய பிரதாப், ராஜ் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அதனால், இந்த மோசடி குறித்து பதிவான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யமுடியவில்லை’ என்று கூறப்பட்டு இருந்தது.

அதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அதிகாரிகள் மீது நடவடிக்கை

கைது செய்யப்பட்ட சித்ரா மீதான வழக்கை தனியாக பிரித்து விசாரணை கோர்ட்டு 6 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும். கொரோனா ஊரடங்கு பாதிப்பை சாதகமாக பயன்படுத்தி சமீபகாலமாக, போலி வேலைவாய்ப்பு நிறுவனங்கள் இளைஞர்களை மோசடி செய்துள்ளன. ஏமாற்றம் அடைந்த இளைஞர்கள் பலர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இது வேதனைக்குரியது.

மேலும், இந்த மோசடி குறித்த விசாரணையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சுணக்கம் காட்டுவதாக தெரிந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

சுயவேலைவாய்ப்பு

மேலும் அந்த உத்தரவில், ‘வேலைவாய்ப்பு மோசடி வெளியில் மட்டும் நடக்கவில்லை. சென்னை ஐகோர்ட்டு வளாகத்திலேயே ஒருவர் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

வேலை வாங்கி தருவதாக கூறி நடைபெறும் மோசடியை தடுக்கவும், வேலைவாய்ப்பின்மை பிரச்சினையை சமாளிக்கவும் மத்திய, மாநில அரசுகள் இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்’ என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

Next Story