தமிழர்களை சிறப்பான பதவிகளில் நியமிக்கிறார் மோடி அண்ணாமலை அறிக்கை


தமிழர்களை சிறப்பான பதவிகளில் நியமிக்கிறார் மோடி அண்ணாமலை அறிக்கை
x
தினத்தந்தி 23 Aug 2021 12:00 AM GMT (Updated: 23 Aug 2021 12:00 AM GMT)

தமிழர்களை சிறப்பான பதவிகளில் நியமிக்கிறார் மோடி அண்ணாமலை அறிக்கை.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பா.ஜ.க.வை தமிழகத்தில் கட்டமைத்த தொடக்ககால அமைப்பாளர்களில் ஒருவர் இல.கணேசன். அவர் இன்று மணிப்பூர் மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டு இருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழகத்தில் சமூகத்திற்காகவும், கட்சிக்காகவும், உண்மையாகவும், நேர்மையாகவும் உழைப்பவர்களை எல்லாம் பல துறைகளில் அடையாளம் கண்டு பதவி கொடுத்து மரியாதை செய்யும் ஒரே கட்சி பா.ஜ.க. தான்.

மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகநாதன், கேரள முன்னாள் கவர்னர் நீதிபதி சதாசிவம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், முன்னாள் மத்திய நெடுஞ்சாலைத்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை மந்திரி எல்.முருகன் என்ற வரிசையில் தற்போது மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள இல.கணேசனும் சிறப்பிக்கப்படுகிறார்.

தொடர்ந்து தமிழர்களை சிறப்பான பதவிகளில் நியமித்ததன் மூலம் தமிழகத்திற்கு, தான் வழங்கும் முக்கியத்துவத்தை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார் நம் பிரதமர் நரேந்திர மோடி.

விரைவில் மணிப்பூர் கவர்னராக பொறுப்பேற்க இருக்கும் மூத்த தலைவர் இல.கணேசனுக்கு பா.ஜ.க. சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story