சட்டமன்ற பொன்விழா நாயகன் துரைமுருகன்; முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் பாராட்டு
எந்தத் துறையைக் கொடுத்தாலும் சிறப்புடன் செயல்படக் கூடியவர் துரைமுருகன் என மு.க ஸ்டாலின் பாராட்டினார்.
சென்னை,
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இன்று, துரைமுருகனுக்கு பாராட்டு தீர்மானத்தை முன்மொழிந்து முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதாவது;-
கட்சிக்கும் ஆட்சிக்கும் உறுதுணையாக இருப்பவர் துரைமுருகன். சட்டப்பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தக் கூடியவர் துரைமுருகன், அழவைக்கவும் அவரால் முடியும். கருணாநிதி, அன்பழகன் இழப்புக்குப் பிறகு அவர்களது இடத்தில் துரைமுருகனை வைத்துப் பார்க்கிறேன். கருணாநிதியின் அருகில் மட்டுமல்ல, அவரது மனதிலும் ஆசனம்போட்டு உட்கார்ந்திருப்பவர் துரைமுருகன். துரைமுருகனுடன் கருணாநிதி பேசிக் கொண்டே இருப்பதைப் பார்க்க பொறாமையாக இருக்கும்.
மனதில் பட்டத்தை உறுதியுடன் சொல்லக்கூடியவர். எந்தத் துறையைக் கொடுத்தாலும் சிறப்புடன் செயல்படக் கூடியவர். இந்தக் கூட்டத்தை அழ வைக்க நினைத்தால் அழ வைப்பார், சிரிக்க வைக்க நினைத்தால் சிரிக்க வைப்பார். 50 ஆண்டு காலம் சட்டமன்ற உறப்பினராக இருந்து பொன் விழா நாயகனாக இருக்கிறார் துரைமுருகன். எனக்கு வழிகாட்டியாக இருப்பவர்” என்று பாராட்டினர்.
முதல் அமைச்சர் பேசும் போது துரைமுருகன் உணர்ச்சிப் பெருக்கில் கண்கலங்கினார். பின்னர் பேசிய துரைமுருகன், “ முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நன்றிக் கடன் பட்டவனாக வாழ்நாள் முழுவதும் இருப்பேன். இவ்வளவு பற்றும் பாசமும் முதல் அமைச்சர் என் மீது வைத்திருப்பார் என நினைக்கவில்லை” என்றார்.
Related Tags :
Next Story