வியாசர்பாடியில் பழிக்குப்பழியாக பயங்கரம்: வீட்டு வாசலில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை 8 பேர் கைது


வியாசர்பாடியில் பழிக்குப்பழியாக பயங்கரம்: வீட்டு வாசலில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை 8 பேர் கைது
x
தினத்தந்தி 24 Aug 2021 8:57 PM GMT (Updated: 24 Aug 2021 8:57 PM GMT)

வியாசர்பாடியில் பழிக்குப்பழியாக முன்விரோதத்தில் வீட்டு வாசலில் நின்ற பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி ஜே.ஜே.ஆர். நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ஹரி (வயது 44). இவர் வியாசர்பாடி பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர். இவர் மீது வியாசர்பாடி எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் தனது வீட்டின் வெளியே நின்று கொண்டு இருந்த ஹரியை முக கவசம் அணிந்து கொண்டு வந்த 5-க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் ஒன்று சூழ்ந்து கொண்டு பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர்.இதனால் தலை, முகம் ஆகிய பகுதிகளில் வெட்டுப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

இதைப்பார்த்த ஹரியின் தம்பி ரவி என்பவர் உடனே அவரை மீட்டு, சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3 மணி அளவில் ஹரி பரிதாபமாக இறந்தார்.

8 பேர் கைது

இந்த தகவலை அறிந்த எம்.கே.பி. நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து எம்.கே.பி. நகர் போலீஸ் உதவி கமிஷனர் தமிழ்வாணன் உத்தரவின்பேரில், எம்.கே.பி. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கொலை தொடர்பாக நேற்று அதே பகுதியில் பதுங்கியிருந்த விவசார்பாடி பகுதியை சேர்ந்த சந்தோஷ் (வயது 38), தமிழ் (26), சஞ்சய் (24) தினேஷ்குமார் (24), சங்கர் (23), வாசு (19), பிரவீன் (19), வெள்ளை அஜித் (24) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

முன்விரோதத்தில் கொலை

மேலும் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திய நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சரித்திர பதிவேடு குற்றவாளியான பப்லு என்பவரை மாமூல் வாங்கும் தகராறில் இருவருக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஹரி மற்றும் அவரது மகன் லாரன்ஸ் ஆகியோர் ஆந்திர மாநிலத்தில் தங்கியிருந்தபோது வெட்டிக்கொலை செய்தனர். அந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தோடு ஹரியை பப்லூவின் கூட்டாளிகள் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story