ஆசிரியர் ஒருவர் தடுப்பூசி போடாவிட்டாலும் பள்ளியை திறக்க அனுமதி கிடையாது கல்வித்துறை அதிரடி உத்தரவு


ஆசிரியர் ஒருவர் தடுப்பூசி போடாவிட்டாலும் பள்ளியை திறக்க அனுமதி கிடையாது கல்வித்துறை அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 25 Aug 2021 11:12 PM GMT (Updated: 25 Aug 2021 11:12 PM GMT)

ஆசிரியர் ஒருவர் தடுப்பூசி போடாவிட்டாலும் பள்ளியை திறக்க அனுமதி கிடையாது கல்வித்துறை அதிரடி உத்தரவு.

சென்னை,

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள், வருகிற 1-ந்தேதி (புதன்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்பட இருக்கின்றன. இதில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளன. இதற்கான ஆயத்த பணிகளில் கல்வித்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பள்ளிகள் தீவிரமாக ஈடுபட்டு இருக்கின்றன.

சுகாதாரத்துறை சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பில், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் என அனைவரும் கண்டிப்பாக 2 தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் 2 தவணை தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், அந்த மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். அதில், ‘மாவட்ட கலெக்டர் ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும், அவர் சார்ந்த பள்ளி திறக்க அனுமதிக்கப்படமாட்டாது என்றும், அந்த ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆகவே இதில் கவனம் செலுத்தி ஏதேனும் ஆசிரியர் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் அவர்களை தடுப்பூசிபோட அறிவுறுத்துமாறு அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்துவகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் இம்மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டு உள்ளது.

Next Story