தமிழக சட்டசபையில் கேள்வி நேரங்களில் தலைவர்களை புகழ்ந்து பேச தடை


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 27 Aug 2021 7:57 AM GMT (Updated: 27 Aug 2021 7:57 AM GMT)

தமிழக சட்டசபையில் கேள்வி நேரங்களில் தலைவர்களை புகழ்ந்து பேச வேண்டாம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.  தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மீதான மானிய கோரிக்கைகளின் மீது இன்று விவாதம் நடைபெறுகிறது. அமைச்சர் எ.வ. வேலு உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசினார்.

அதற்கு முன்பு அவையின் தொடக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கை தமிழர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் அறிவித்து உரையாற்றினார்.
 
அப்போது உரையை ஆரம்பிக்கும் முன்னர் ஸ்டாலின், சட்டமுன்வடிவு மற்றும் கேள்வி நேரத்தில் தலைவர்களை புகழ்ந்து பேச வேண்டாம் என்று வலியுறுத்தினார். நேரத்தின் அருமை கருதி அமைச்சர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் இந்த கட்டளையை பிறப்பிக்கிறேன் என்று அவர் கண்டிப்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் உரையை ஆரம்பிக்கும் முன்பு பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின் என வரிசையாக பாராட்டுவதனை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்த மாதிரியான புகழ்ச்சி உரையை சட்டமுன்வடிவு மற்றும் கேள்வி நேரங்களில் பயன்படுத்துவதால் நேரம் விரயம் ஆகிறது என்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


Next Story