‘விரட்டி விரட்டி வெளுக்க தோணுது’ என பாட்டுப்பாடி போலீசார் முன்பு நடனமாடி இளம்பெண் ரகளை


‘விரட்டி விரட்டி வெளுக்க தோணுது’ என பாட்டுப்பாடி போலீசார் முன்பு நடனமாடி இளம்பெண் ரகளை
x
தினத்தந்தி 27 Aug 2021 10:03 PM GMT (Updated: 27 Aug 2021 10:03 PM GMT)

முககவசம் அணியாததற்கு அபராதம் விதித்ததால், ‘விரட்டி விரட்டி வெளுக்க தோணுது’ என பாட்டு பாடி, ரெயில்வே போலீசார் முன்பு நடனமாடி ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்ணால் சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

கொரோனா தொற்று பரவலை தடுக்க ரெயில் நிலையங்களில் முககவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், சென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் முககவசம் அணியாமல் நடைமேடையில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ரெயில் நிலையத்தில் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர், அந்த பெண்ணுக்கு அபராதம் விதித்தார்.

இதையடுத்து அந்த இளம்பெண் கையில் வைத்திருந்த முககவசத்தை அணிந்து கொண்டு, அபராதம் செலுத்த மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், டிக்கெட் பரிசோதகர் தொடர்ந்து அபராதம் விதித்ததில் உறுதியாக இருந்தார்.. இதனால், அந்த இளம்பெண், டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசாரும் அந்த பெண்ணை அபராதம் கட்டியே தீர வேண்டும் என தெரிவித்தனர்.

நடனமாடி ரகளை

இதனால், திடீரென நடனம் ஆடிய அந்த இளம்பெண் போலீசாரை கேலி செய்து, வம்புக்கு இழுத்து சீண்டினார். ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’, ‘உன்ன விரட்டி விரட்டி வெளுக்க தோணுது’ என பாட்டு பாடிக்கொண்டும், ரெயில் நிலையத்தில் குத்தாட்டம் போட்டும் அட்டகாசம் செய்தார். அந்த இளம்பெண்ணின் அட்டகாசத்தை அங்கிருந்த பயணிகள் அனைவரும் நின்று வேடிக்கை பார்த்தும், செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். மேலும், அந்த பெண்ணை அங்கிருந்த பயணிகள் சிலரும் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அந்த இளம்பெண் சமாதானம் ஆகவில்லை.

தொடர்ந்து நடைமேடையில் தனது பையை மாட்டிக்கொண்டு அங்கும் இங்குமாக நடனமாடிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணும் அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டு, அபராதம் செலுத்தினார். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை எச்சரித்து அனுப்பி விட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் அந்த பெண் செய்த ரகளையால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அந்த பெண் நடனமாடி போலீசாரை சீண்டிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Next Story