அரசு பஸ்-கார் மோதல்; சென்னையை சேர்ந்த 6 பேர் பலி ஊட்டிக்கு சுற்றுலா சென்று திரும்பியபோது பரிதாபம்


அரசு பஸ்-கார் மோதல்; சென்னையை சேர்ந்த 6 பேர் பலி ஊட்டிக்கு சுற்றுலா சென்று திரும்பியபோது பரிதாபம்
x
தினத்தந்தி 29 Aug 2021 8:49 PM GMT (Updated: 29 Aug 2021 8:49 PM GMT)

தியாகதுருகத்தில் அரசு பஸ்-கார் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த 6 பேர் பலியானார்கள்.

கள்ளக்குறிச்சி,

சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த எபினேசர் இமான்(வயது 28), இவான், ரபேக்கா, இவரது தாயார் உள்பட 6 பேர் ஒரு காரில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் சென்னைக்கு புறப்பட்டனர். இவர்களது கார், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் புறவழிச்சாலையில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தது.

அதே வேளையில் சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை அழகுராஜன்(வயது 40) என்பவர் ஓட்டினார்.

தியாகதுருகம் புறவழிச்சாலை பிரிதிவிமங்கலம் பஸ்நிறுத்தம் அருகே சுற்றுலா சென்று திரும்பியவர்கள் வந்த காரும், எதிரே வந்த அரசு பஸ்சும் கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதிக்கொண்டன.

மீட்பு பணி

இந்த கோர விபத்தில் பஸ்சின் முன்பக்க அடியில் கார் சிக்கிக்கொண்டது. இதனால் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. காரை சில அடி தூரத்துக்கு பஸ் இழுத்து சென்று சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ்சுக்கு அடியில் சிக்கிய காரை மீட்பு வாகனம் மூலம் மீட்டனர்.

6 பேர் பலி

இந்த விபத்தில் காரில் வந்த எபினேசர் இமான், இவான், ரபேக்கா, இவரது தாயார் உள்பட 6 பேர் இருக்கையில் அமர்ந்தபடியே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

இவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பஸ்சில் வந்த 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story