2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை நாளை மீண்டும் கூடுகிறது


2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை நாளை மீண்டும் கூடுகிறது
x
தினத்தந்தி 29 Aug 2021 9:40 PM GMT (Updated: 29 Aug 2021 9:40 PM GMT)

2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை நாளை (செவ்வாய்கிழமை) மீண்டும் கூடுகிறது. வருவாய்த்துறை, தொழில்துறை, தமிழ் வளர்ச்சித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

சென்னை,

தமிழக சட்டசபையில் கடந்த 13-ந் தேதி பொது பட்ஜெட்டும், 14-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 16-ந் தேதி முதல் 4 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதமும், அமைச்சர்களின் பதில் உரையும் இடம்பெற்றன.

தொடர்ந்து, 23-ந் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை, நீர்வளத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, கூட்டுறவுத்துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, பால்வளத்துறை என 13 துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்து முடிந்துள்ளது.

2 நாள் விடுமுறை

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சட்டசபை கூட்டம் கிடையாது. இன்று (திங்கட்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி என்பதால் அரசு விடுமுறை நாளாகும். எனவே, 2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை நாளை (செவ்வாய்கிழமை) மீண்டும் கூடுகிறது.

காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, இயற்கைச் சீற்றங்கள் குறித்து துயர்தணிப்புத்துறை, தொழில்துறை, தமிழ் வளர்ச்சித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும்.

விவாதம்

இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பேசுகிறார்கள். இறுதியாக தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிட இருக்கின்றனர்.

Next Story