ரூ.625 கோடியில் 8,905 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


ரூ.625 கோடியில் 8,905 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 29 Aug 2021 9:58 PM GMT (Updated: 29 Aug 2021 9:58 PM GMT)

தமிழ்நாட்டில் கூடுதல் மின் பளு மற்றும் குறைந்த மின் அழுத்தத்தை தவிர்க்க ரூ.625 கோடியில் 8,905 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணியை கொளத்தூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜி.கே.எம்.காலனியில் அமைந்துள்ள விளையாட்டு திடலில், தமிழ்நாட்டில் மின் பளு மற்றும் குறைந்த மின் அழுத்தம் தவிர்க்க ரூ.625 கோடி மதிப்பில் 8,905 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணியை நேற்று தொடங்கி வைத்தார்.

மேலும், கொளத்தூர் தொகுதியில் லோகோ செட் காந்தி நகர், ஜி.கே.எம். காலனி 25-வது தெரு, ஜி.கே.எம். காலனி 30-வது தெரு, வி.வி.நகர் 2-வது தெரு, பூம்புகார் நகர் 1-வது மெயின்ரோடு மற்றும் யுனைடெட் காலனி 2-வது தெரு ஆகிய 6 இடங்களில் வளைய சுற்றுத்தர அமைப்புடன் கூடிய மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் அதனை இயக்கி வைத்தார்.

மின் அழுத்த குறைபாடு

தமிழ்நாடு முழுவதும் சீரான மின் வினியோகம் செய்ய கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், சில மின் மாற்றிகளில் அதிக மின்பளுவும், சில மின்மாற்றிகளில் குறைந்த மின் அழுத்த குறைபாடும் ஏற்படுகிறது.

மேலும், சில இடங்களில் மின் பாதைகளின் நீளம் அதிகமாக உள்ளதாலும், பல நுகர்வோர்கள் அந்த மின் பாதையில் இருந்து ஒரே நேரத்தில் மின் சாதனங்களை பயன்படுத்துவதாலும் மின் நுகர்வோருக்கு குறைந்த மின் அழுத்த குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

ரூ.625 கோடியில் மின்மாற்றிகள்

மேற்கண்ட குறைபாடுகளை தவிர்க்கும் பொருட்டு, அனைத்து மின் பகிர்மான வட்டங்களிலும் மின் பளுவை குறைப்பதற்கு 5,705 கூடுதல் மின்மாற்றிகளும், குறைந்த மின் அழுத்தத்தை சீர்செய்ய 3,200 கூடுதல் மின்மாற்றிகளும் என மொத்தம் 8,905 மின்மாற்றிகளை ரூ.625 கோடி மதிப்பீட்டில் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். 4 மாதங்களில் அனைத்து பணிகளையும் முடிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் அந்தந்த இடத்திற்கு தகுந்தாற்போல் உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளில் மின் பளுக்களை பகிர்ந்து அளிப்பதன் மூலம் மின்மாற்றியின் சுமை குறைக்கப்பட்டு அனைத்து நுகர்வோர்களுக்கும் சீரான மின் அழுத்தத்தில் மின் வினியோகம் வழங்கப்படும்.

பங்கேற்றவர்கள்

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சேகர்பாபு மற்றும் தாயகம் கவி எம்.எல்.ஏ., தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி, பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, எரிசக்தித் துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story