இந்தியா பெருமை கொள்வதற்கு காரணமான சாதனையாளர்களுக்கு பாராட்டுகள்; பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்


இந்தியா பெருமை கொள்வதற்கு காரணமான சாதனையாளர்களுக்கு பாராட்டுகள்; பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
x
தினத்தந்தி 30 Aug 2021 8:00 AM GMT (Updated: 30 Aug 2021 8:00 AM GMT)

டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை தட்டி சென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



சென்னை,

இந்தியா பெருமை கொள்வதற்கு காரணமான சாதனையாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில், மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா அதிரடியாக விளையாடி தங்கம் வென்றார்.

இந்திய வீரர் யோகேஷ் கதூனியா வட்டு எறிதலில் வெள்ளி பதக்கம், தேவேந்திர ஜஜாரியா மற்றும் சுந்தர் சிங் ஈட்டி எறிதலில் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்து உள்ளனர்.

இந்நிலையில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை தட்டி சென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிகளின் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அவனி லெகாரா, வட்டு எறிதலில் வெள்ளி பதக்கம் வென்ற வீரர் யோகேஷ் கதுனியா, ஈட்டி எறிதலில் வெள்ளி, வெண்கலம் வென்ற தேவேந்திர ஜஜாரியா, சுந்தர்சிங்குக்கு வாழ்த்துகள்.

பாராஒலிம்பிக் போட்டிகளில் ஒரே நாளில் இந்தியா 4 பதக்கங்களை வென்றது இதுவே முதல்முறை.  இந்தியா அதிக பதக்கங்களை வென்றிருப்பதும் இந்த போட்டியில்தான். இந்தியா பெருமை கொள்வதற்கு காரணமான சாதனையாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்! என குறிப்பிட்டுள்ளார்.




Next Story