பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பன்வாரிலால் புரோகித் வாழ்த்து


பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பன்வாரிலால் புரோகித் வாழ்த்து
x
தினத்தந்தி 30 Aug 2021 9:05 PM GMT (Updated: 30 Aug 2021 9:05 PM GMT)

பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பன்வாரிலால் புரோகித் வாழ்த்து.

சென்னை,

டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-

டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டியின் பல்வேறு பிரிவுகளில் பதக்கங்கள் வென்ற அவனி லெகாரா, சுமித் அந்தில், யோகேஷ் காதுனியா, தேவேந்திர ஜஜாரியா, நிஷத் குமார், பவானி பென் பட்டேல், சுந்தர் சிங் குஜ்ரார் ஆகியோருக்கு என்னுடைய இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாராஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கம் வென்ற இந்திய பெண் என்ற வரலாற்றை துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகாரா படைத்துள்ளார். ஈட்டி எறிதலில் சுமித் அந்தில் தங்கம் வென்றுள்ளார்.

வட்டு எறிதலில் யோகேஷ் காதுனியா வெள்ளி பதக்கமும், ஈட்டி எறிதல் பிரிவுகளில் தேவேந்திர ஜஜாரியா வெள்ளி பதக்கமும், சுந்தர் சிங் குஜ்ரார் வெண்கல பதக்கமும், உயரம் தாண்டுதலில் நிஷத் குமார் வெள்ளி பதக்கமும், டேபிள் டென்னிஸ் போட்டியில் பவானிபென் பட்டேல் வெள்ளி பதக்கமும் பெற்றுள்ளனர். வீரர்கள் தங்களுடைய குறிப்பிடத்தகுந்த சாதனைகள் மூலம் இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளனர்.

அவர்களுடைய சாதனைகள், பாராஒலிம்பிக் போட்டி உள்பட சர்வதேச அளவிலான போட்டிகளில் நம்முடைய வீரர்கள் தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி நமது நாட்டுக்கு மேலும் பதக்கங்களையும், புகழையும் சேர்ப்பதற்கு ஊக்கமாகவும், உத்வேகம் அளிப்பதாகவும் அமையும். பதக்கங்களை வென்ற வீரர்கள், அவர்களுடைய பெற்றோர், பயிற்சியாளர்களை வாழ்த்துகிறேன். வீரர்களின் எதிர்காலம் சிறப்பானதாக அமைய வேண்டும் என்று எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story