விளைந்த நெல்லை கொள்முதல் செய்து விவசாயிகளின் கண்ணீரை துடைக்க வேண்டும்


விளைந்த நெல்லை கொள்முதல் செய்து விவசாயிகளின் கண்ணீரை துடைக்க வேண்டும்
x
தினத்தந்தி 31 Aug 2021 8:57 PM GMT (Updated: 31 Aug 2021 8:57 PM GMT)

விளைந்த நெல்லை கொள்முதல் செய்து விவசாயிகளின் கண்ணீரை துடைக்க வேண்டும் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் விவசாயிகள் நல அணி மாநில செயலாளர் மயில்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. அரசு வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டபோது, மக்கள் நீதி மய்யம் கட்சியாலும், தலைவர் கமல்ஹாசனாலும் முழுமனதோடு பாராட்டப்பட்டது. ஆனால் தொடர்ச்சியாக நாம் அறியும் தகவல்கள் இதற்கு முரணாகவும், வேதனையூட்டுவதாகவும் இருக்கிறது.

வயலில் வளர்ந்து நிற்கும் பயிர்களுக்கு சரியான நேரத்தில் உரமிட வழியில்லாமல் விவசாயிகள் தமிழகமெங்கும் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள். இன்னொருபுறம் அறுவடையான நெல்லை கொள்முதல் செய்வதில் அரசு ஆர்வம் காட்டாததால் மயிலாடுதுறை பகுதியில் விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கின்றனர். இதைவிட கொடுமை தேனி பகுதியில் அரசு கொள்முதல் செய்த நெல்லை சரியாக பாதுகாக்காமல் மழையில் நனையவிட்டு அது முளைத்துக்கிடக்கும் அவல நிலை.

தி.மு.க. அரசு விவசாயிகள் பிரச்சினையில் தனிக்கவனம் செலுத்தும் நோக்கில்தான் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்கிறது என்று நாம் நினைத்தால் அது வெறும் ஏட்டுச்சுரைக்காய், கறிக்கு உதவாது என்பது இப்போது தெரிகிறது. எனவே ஆளும் தி.மு.க. அரசு விவசாயிகள் மீது உண்மையான அக்கறையோடு உர தட்டுப்பாட்டை நீக்கியும், விளைந்த நெல்லை கொள்முதல் செய்தும் அவர்கள் கண்ணீரை துடைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story