மயக்க ஊசி போட்டு சென்னை போலீஸ்காரரிடம் பணம் பறித்தவர் ஆந்திராவில் பிடிபட்டார் பரபரப்பு தகவல்


மயக்க ஊசி போட்டு சென்னை போலீஸ்காரரிடம் பணம் பறித்தவர் ஆந்திராவில் பிடிபட்டார் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 2 Sep 2021 6:13 PM GMT (Updated: 2 Sep 2021 6:13 PM GMT)

சென்னையில் உளவுப்பிரிவு போலீசாருக்கு மயக்க ஊசி போட்டு ரூ.1 லட்சம் பணம் திருடிய வழக்கில் முக்கிய குற்றவாளி ஆந்திராவில் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை சூளைமேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 45). உளவுப்பிரிவு போலீஸ்காரரான இவர், கடந்த 28-ந்தேதி சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனரை சந்தித்து பரபரப்பு புகார் மனு அளித்திருந்தார். அந்த புகார் மனுவில், ‘என்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இறக்கிவிடுவதாக கூறி கடந்த 28-ந்தேதி எனது பகுதியை சேர்ந்த அஜய்விக்கி (25) என்ற வாலிபர் காரில் அழைத்து சென்றார். பின்னர் அவர் என்னிடம், ‘நான் அடையாறில் புதிதாக ஒரு கடை திறந்து உள்ளேன். நீங்கள் பார்த்துவிட்டு செல்லுங்கள்’ என்று அழைத்தார். நானும் சென்றேன். வழியில் 2 பேர் காரின் பின் சீட்டில் ஏறினார்கள். அவர்கள் எனக்கு மயக்க ஊசி செலுத்தி என்னுடைய செல்போன் மற்றும் ‘கூகுள் பே’ மூலம் ரூ.1 லட்சம் பணத்தை பறித்து சென்றுவிட்டனர்’ என்று கூறி இருந்தார்.

2 பேர் கைது

போலீஸ்காரரையே கடத்தி பணம் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் விசாரணையில் ரவியை அழைத்து சென்ற கார் அதே பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பவருக்கு சொந்தமானது என்பதும், இந்த வழக்கில் அவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஓசூரில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய குற்றவாளியான அஜய்விக்கி ஆந்திராவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் ஆந்திரா சென்று அவரை அதிரடியாக கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டிருந்த லோகேசும் கைது செய்யப்பட்டார்.

காரணம் என்ன?

அஜய்விக்கியிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், போலீஸ்காரர் ரவியும், அவரும் உடன்பிறவாத சகோதரர்கள் போல் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த பழக்கத்தை சாதகமாக வைத்து அவரை ஏமாற்றி அழைத்து சென்று பணம் பறித்தது தெரியவந்தது.

அதே நேரத்தில் இந்த வழக்கில் பெண்கள் தொடர்பான பிரச்சினை இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த விசாரணை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த வழக்கில் தொடர்புடைய நிஷாந்த் என்ற வாலிபர் தலைமறைவாக உள்ளார். அவரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

Next Story