ரூ.240 கோடிக்கு போலி ரசீது தயாரிப்பு ஜி.எஸ்.டி. வரி மோசடியில் 2 பேர் கைது


ரூ.240 கோடிக்கு போலி ரசீது தயாரிப்பு ஜி.எஸ்.டி. வரி மோசடியில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 Sep 2021 9:19 PM GMT (Updated: 2 Sep 2021 9:19 PM GMT)

சென்னையில் ரூ.240 கோடிக்கு போலி ரசீதுகள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னையை சேர்ந்த உடைந்த உலோக பொருட்களை வினியோகம் செய்யும் வியாபாரி ஒருவர், சரக்குகளை அனுப்பாமல் ரூ.240 கோடி அளவுக்கு வரி மதிப்பீட்டுக்கு போலி ரசீதுகள் வழங்கி இருப்பதையும், இதன் மூலம் 8 போலி நிறுவனங்களுக்கு தகுதியற்ற முறையில் ரூ.43 கோடி உள்ளீட்டு வரியாக பெற்று மோசடி செய்து இருப்பதையும் ஜி.எஸ்.டி. வருவாய் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அந்த வியாபாரியின் பதிவு செய்யப்பட்ட அலுவலகங்கள் மற்றும் போலி நிறுவனங்களில் கடந்த 31-ந்தேதி அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் மோசடி தொடர்பான போலி ஆவணங்கள் சிக்கின. மேலும் இந்த மோசடியை அந்த வியாபாரியும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஜி.எஸ்.டி. வரி மோசடி மூலம் அரசுக்கு ரூ.43 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அந்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.

டீலரும் சிக்கினார்

இந்த மோசடியில் உடைந்த பொருட்களை வாங்கும் டீலர் ஒருவரின் 2 நிறுவனங்களுக்கு ரூ.11.80 கோடி மதிப்பிலான உள்ளீட்டு வரி தகுதியற்ற முறையில் சென்றிருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த டீலரும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட 2 பேரும் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மேற்கண்ட தகவல் ஜி.எஸ்.டி. (புலனாய்வு இயக்குனரகம்) முதன்மை கூடுதல் தலைமை இயக்குனர் மயாங்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story