போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு மணிமண்டபம்: மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு


போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு மணிமண்டபம்: மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
x
தினத்தந்தி 2 Sep 2021 10:51 PM GMT (Updated: 2 Sep 2021 10:51 PM GMT)

போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு மணிமண்டபம்: மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 1987-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு வார கால தொடர் சாலை மறியல் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த 21 மாவீரர்களுக்கு ரூ.4 கோடியில் மணிமண்டபம் அமைக்கப்படும், அவர்களின் குடும்பத்தினருக்கு கல்வி தகுதிக்கேற்ப அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

இந்தியா சந்தித்த மிகப்பெரிய சமூகநீதிப் போராட்டம் என்றால் அது வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி எனது தலைமையில் நடத்தப்பட்ட அறவழிப் போராட்டம் தான். ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து முன்னேறுவதற்காக உரிமை கேட்டுப் போராடிய மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு, கொடூரமானத் தாக்குதல் உள்ளிட்ட பல வழிகளில் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டனர். இதில் 21 மாவீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த 21 பேருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பதன் மூலம் எனது தலைமையில் வன்னிய மக்கள் நடத்திய போராட்டத்தை சமூக நீதிப் போராட்டமாக தமிழக அரசு அங்கீகரித்திருக்கிறது.

அத்தகைய சமூகநீதிப் போராட்டத்தில் இருந்து உருவானது தான் பா.ம.க. ஆகும். தமிழ்நாட்டில் அனைத்து மக்களுக்கும் சமூகநீதி கிடைக்க வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் விருப்பமும், நோக்கமும் ஆகும். அந்த இலக்கை அடைவதற்காக பா.ம.க.வின் சமூகநீதிப் பயணம் தடையின்றி தொடரும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story