‘நீட்’ தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் சட்டசபையில் அமைச்சர் தகவல்


‘நீட்’ தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் சட்டசபையில் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 3 Sep 2021 12:13 AM GMT (Updated: 3 Sep 2021 12:13 AM GMT)

மருத்துவ மாணவர் சேர்க்கையில் சமூகநீதியை பாதுகாக்கும் வகையில் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று தமிழக சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறைக்கான கொள்கை விளக்க குறிப்பை நேற்று அந்த துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வுக்கு (நீட்) தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மருத்துவ படிப்பிற்கான இடங்கள், ஏழை மாணவர்களுக்கு கிடைப்பதில் சிரமங்கள் உள்ளன. அதை கருத்தில் கொண்டு, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்மட்டக்குழுவை அமைத்து கடந்த ஜூன் 5-ந் தேதியன்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

பாதிப்புகளை களைய ஆய்வு

தேசிய தகுதி மற்றும்நுழைவுத்தேர்வை அடிப்படையாக கொண்ட மருத்துவ மாணவர்கள் சேர்க்கை முறை சமூக, பொருளாதார மற்றும் கூட்டாட்சி முறையை மோசமாக பாதிக்கிறதா? என்பதையும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் தமிழ்வழிக்கல்வி பயிலும் மாணவர்கள் அல்லது வேறு பிரிவு மாணவர்களை பாதிக்கிறதா? என்பதையும் உயர்மட்டக்குழு ஆய்வு செய்தது.

மேலும், அந்த பாதிப்புகளை களைவதற்கு எடுக்கப்பட வேண்டிய தகுந்த முன்னெடுப்பு நடவடிக்கைகள் குறித்து தகுந்த ஆய்வு செய்து தனது பரிந்துரைகளை அரசிடம் கடந்த ஜூலை 14-ந் தேதி உயர்மட்டக்குழு வழங்கியது. அந்த பரிந்துரைகளை அரசு ஆய்வு செய்தது.

புதிய சட்டம்

அதற்காக தலைமைச்செயலாளர் தலைமையில் உயர் அலுவலர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டது. மருத்துவக்கல்வி சேர்க்கையில் அனைத்து நிலைகளிலும் ‘நீட்’ தேர்வை புறந்தள்ளுவதற்கு தமிழ்நாடு மாநில சட்டம் 3/2007 என்ற சட்டத்தை போன்ற புதிய சட்டத்தை இயற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலை பெறலாம் என்று உயர் அலுவலர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

மருத்துவக்கல்வி சேர்க்கை முறைகளில் பாகுபாடு காட்டப்படுவதால், ஒதுக்கப்படும் மற்றும் பாதிக்கப்படும் மாணவ சமுதாயத்திற்கான சமூகநீதியை பாதுகாப்பதை இது உறுதி செய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story