2 பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை அவனி லெகாராவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


2 பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை அவனி லெகாராவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 3 Sep 2021 6:16 PM GMT (Updated: 3 Sep 2021 6:16 PM GMT)

பாரா ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற அவனி லெகாராவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டோக்கியோ,

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில், இந்தியா இதுவரை 5 வெண்கலம், 6 வெள்ளி மற்றும் 2 தங்கப்பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 37-வது இடத்தில் உள்ளது. இதில் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா வெண்கலம் வென்று உள்ளார். மேலும் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றதன் மூலம், பாராலிம்பிக் போட்டியில் இரு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை 19 வயதான அவனி லெகாரா பெற்றுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த அவனி லேஹராவுக்குக் கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த கார் விபத்தில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டது. அதன்பின் துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ராவின் வாழ்கை வரலாற்றைப் படித்தபின் அவனி, துப்பாக்கி சுடும் பயிற்சியில் 2015-ஆம் ஆண்டு சேர்ந்தார். 2017 முதல் இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளில் பங்கெடுத்துவரும் அவனி, ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வருகிறார்.

தற்போது அவனி லெகாராவுக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஒன்றுக்கு மேற்பட்ட பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை அவனி லெகாரா பெற்றுள்ளதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

முதுகுத் தண்டுவடத்தில் பாதிப்பை ஏற்படுத்திய விபத்தால் நிலைகுலையாமல், நாம் அனைவரும் பின்பற்றத்தக்க எடுத்துக்காட்டாய் அவர் ஓங்கி உயர்ந்துள்ளார். அவரது மகத்தான ஊக்கத்தையும் சாதனையையும் நான் போற்றுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story