திராவிட களஞ்சியம் புத்தகம் தொடர்பாக தேவையற்ற குழப்பங்களை உருவாக்க முயல வேண்டாம்


திராவிட களஞ்சியம் புத்தகம் தொடர்பாக தேவையற்ற குழப்பங்களை உருவாக்க முயல வேண்டாம்
x
தினத்தந்தி 3 Sep 2021 7:16 PM GMT (Updated: 3 Sep 2021 7:16 PM GMT)

திராவிட களஞ்சியம் புத்தகம் தொடர்பாக தேவையற்ற குழப்பங்களை உருவாக்க முயல வேண்டாம் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை.

சென்னை,

தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ் வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கையின் போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், சங்க இலக்கிய வாழ்வியலை புத்தகமாக வெளியிடுதல் மற்றும் திராவிட களஞ்சியம் வெளியிடுதல் தொடர்பாக சில தவறான தகவல்கள் சிலரால் ஊடகங்களில் திட்டமிட்டுப் பகிரப்படுகின்றன.

தமிழ் வளர்ச்சித் துறையின் அறிவிப்பில் உள்ள 10-வது அறிவிப்பு, 2 அம்சங்களைக் கொண்டது. முதலாவது, இளைய தலைமுறையினருக்குச் சங்க இலக்கியச் செல்வத்தை கொண்டு சேர்க்கும் வகையில் சந்தி பிரிக்கப்பட்டு எளிமையான பதிப்புகள் வெளியிடப்படும் என்பது.

2-வது அம்சம் என்னவென்றால் கால்டுவெல் தொடங்கி எமனோ, பர்ரோ, அஸ்கோ பார்போலா, ஐராவதம் மகாதேவன், ஆர்.பாலகிருஷ்ணன் போன்ற திராவிடவியல் அறிஞர்களின் ஆய்வுகள், திராவிட இயக்கம், சுயமரியாதை, சமூக-நீதி, இட ஒதுக்கீடு, இரு மொழிக் கொள்கை, மாநில சுயாட்சி போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து கடந்த 150 ஆண்டுகளில் தமிழக, இந்திய மற்றும் வெளிநாட்டு அறிஞர்கள் எழுதிய தலையங்கங்கள், கதைகள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகளைத் தொகுத்து திராவிட களஞ்சியம் என்ற தனி புத்தகமாக வெளியிடப்படும் என்பதாகும்.

மேற்சொன்ன 2 பணிகளும் தனித்தனியான செயல்பாடுகள். எனவே, அறிவிப்புகளைத் தெளிவாக புரிந்து கொள்ளாமல் யாரும் தேவையற்ற குழப்பங்களை உருவாக்க முயல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story