இந்து கோவில்களில் தமிழில் அர்ச்சனைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு


இந்து கோவில்களில் தமிழில் அர்ச்சனைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 3 Sep 2021 11:44 PM GMT (Updated: 3 Sep 2021 11:44 PM GMT)

இந்து கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

சென்னை,

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்து கோவில்களில் சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என்று 1998-ம் ஆண்டு ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

ஆகம விதிப்படி, கோவில்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளை மாற்ற முடியாது. மத விவகாரங்களில் அரசு தலையிட முடியாது. எனவே, கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

பக்தர்களின் விருப்பம்

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

2008-ம் ஆண்டு ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், ‘கோவில்களில் எந்த மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது பக்தர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது. தமிழில் அர்ச்சனை செய்ய எந்த தடையும் இல்லை' என்று கூறி உள்ளது.

தள்ளுபடி

ஏற்கனவே ஐகோர்ட்டு பரிசீலித்து அளித்த தீர்ப்புக்கு முரணான முடிவை எடுக்க முடியாது. ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்ய தேவையில்லை.

குறிப்பிட்ட மொழியில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கோர்ட்டு வற்புறுத்த முடியாது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Next Story