வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு ‘கப்பலோட்டிய தமிழன்’ விருது சட்டசபையில் 14 அறிவிப்புகளை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்


வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு ‘கப்பலோட்டிய தமிழன்’ விருது சட்டசபையில் 14 அறிவிப்புகளை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
x
தினத்தந்தி 4 Sep 2021 12:22 AM GMT (Updated: 4 Sep 2021 12:22 AM GMT)

வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளையொட்டி 14 அறிவிப்புகளை சட்டசபையில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ரூ.5 லட்சம் ரொக்க பரிசுடன் ‘கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று அப்போது அவர் தெரிவித்தார்.

சென்னை,

கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படும் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 14 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இது குறித்த அறிவிப்பை வெளியிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

முழு உருவ சிலை

இங்கே பேசியிருக்கக்கூடிய பல்வேறு கட்சியினுடைய தலைவர்கள், அயோத்தியதாசருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற அறிவிப்புக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறீர்கள், நன்றியும் தெரிவித்திருக்கிறீர்கள், பாராட்டும் தெரிவித்திருக்கிறீர்கள். அதேநேரத்தில், உறுப்பினர் ஈஸ்வரன், வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாள் வருகின்றது. எனவே, அதனை அரசு விழாவாக, அவரைப் பெருமைப்படுத்தக்கூடிய வகையில் நாம் செயலாற்ற வேண்டுமென்று ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார்.

என்னுடைய முதல் சுதந்திர தின உரை - நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று, என்னுடைய முதல் சுதந்திர தின உரையிலேயே நான், வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்திருக்கிறேன். அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு அவரது 150-வது ஆண்டாக வருகிற காரணத்தால், 14 அறிவிப்புகளை நான் இப்போது அறிவிக்க விரும்புகிறேன். சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிறையில் இழுத்த செக்கு வைக்கப்பட்டிருக்கக்கூடிய மண்டபம் பொலிவூட்டப்பட்டு, அங்கு அன்னாரது மார்பளவு சிலை திறந்து வைக்கப்படும்.

தூத்துக்குடி மாநகரில், முதன்மைச் சாலையான மேலபெரிய காட்டன் சாலை, இனி ‘வ.உ.சிதம்பரனார் சாலை’ என அழைக்கப்படும். தனது வாழ்நாளின் முக்கிய நாட்களைக் கோவைச் சிறையிலே கழித்த வ.உ.சிதம்பரனாருக்கு அவருடைய முழு உருவச் சிலையானது, கோயம்புத்தூர் வ.உ.சிதம்பரனார் பூங்காவில் அமைக்கப்படும்.

வ.உ.சி. பெயரில் விருது

செய்தித்துறையின் பராமரிப்பிலுள்ள ஒட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் வாழ்ந்த நினைவு இல்லமும், திருநெல்வேலியில் உள்ள வ.உ.சிதம்பரனாரின் மணிமண்டபமும் புனர மைக்கப்பட்டு, அவ்விடங்களில் அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறிந்து பயனடையும் வகையில், ஒலி-ஒளி காட்சி அமைக்கப்படும். வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படத்தினை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில், நவீன டிஜிட்டல் முறையிலே அது வெளியிடப்படும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வ.உ.சிதம்பரனாரின் பெயரில் புதிய ஆய்வு இருக்கை ஒன்று அமைக்கப்படும். வ.உ.சிதம்பரனார் எழுதியுள்ள அனைத்து புத்தகங்களும் புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டு, தமிழ்நாடு பாட நூல் கழகத்தின் மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

திருநெல்வேலியில் வ.உ.சிதம்பரனார் மற்றும் மகாகவி பாரதியார் படித்த பள்ளிக்கு தேவையான கூடுதல் வகுப்பறைகள், கலை அரங்கம் மற்றும் நினைவு நுழைவு வாயில் 1.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். கப்பல் கட்டுமானம், தொழில்நுட்பம், போக்குவரத்து ஆகிய கப்பல் தொடர்பான துறைகளில் ஈடுபட்டு, சிறந்த பங்காற்றிவரும் தமிழர் ஒருவருக்கு ‘கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படும். விருது தொகையாக 5 லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

தியாக திருநாள்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் மறைந்த நவம்பர் 18-ந் தேதி, தியாக திருநாளாக அறிவித்து கொண்டாடப்படும். இந்த ஆண்டு, செப்டம்பர் 5-ந் தேதி (நாளை) முதல் செப்டம்பர் 5 2022 வரை, தூத்துக்குடியிலும், திருநெல்வேலியிலும் உருவாகும் அரசு கட்டிடங்களுக்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்டப்படும்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறிந்து பயனடையும் வகையில், போக்குவரத்து துறையின் சார்பில் பஸ் ஒன்றில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்து பள்ளி களுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பப்படும். தமிழ் பல்கலைக்கழகத்தின் வாயிலாக வ.உ.சிதம்பரனார் குறித்த இணையவழி கருத்தரங்கம் நடைபெறும்.

தமிழ் நிகர்நிலை கல்வி கழகத்தின் வாயிலாக கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் எழுதிய நூல்கள் மற்றும் கையெழுத்து பிரதிகள் ஆகியவை முழுவதும் இணையத்திலே மின்மயப்படுத்தி வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story