தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 4 Sep 2021 7:51 AM GMT (Updated: 4 Sep 2021 7:51 AM GMT)

கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் 6ஆம் தேதி வரை மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வழிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் கோவை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.

 நாளை (05-09-2021) நீலகிரி, கோயம்புத்தூர் ,கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். வருகின்ற 6ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும். 

7 மற்றும் 8ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் (கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்ககடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் இரண்டு நாட்களுக்கு மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என்று அதில் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story