பள்ளிகள் திறந்ததால் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்


பள்ளிகள் திறந்ததால் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 4 Sep 2021 5:28 PM GMT (Updated: 4 Sep 2021 5:28 PM GMT)

பள்ளிகள் திறந்த உடன் தான் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது தவறான கருத்து என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

25 நீர்நிலைகள்
சென்னை கிண்டி மடுவாங்கரையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வாரத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

மழை நீர் சேகரிப்பு திட்டம் இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக செயல்பட்டு வருகிறது. சைதாப்பேட்டையில் மட்டும் 148 இடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 25 நீர்நிலைகள் ரூ.200 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் 10.94 லட்சம் குடியிருப்பு உள்ளது.

தவறான கருத்து
அதில் 8 லட்சத்து 24 ஆயிரம் குடியிருப்புகளுக்கு தனித்தனியே குடிநீர் இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 2 லட்சம் குடியிருப்புகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் தனித்தனியே குடிநீர் இணைப்புகள் தரப்பட உள்ளோம். வருங்காலத்தில் தண்ணீர் பிரச்சினையே இல்லாத மாநகரமாக சென்னை மாறும். கடந்த 1-ந் தேதி பள்ளிகள் திறந்தவுடன் தான் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டது என்பது தவறான கருத்து. அவர்களுக்கு முன்பே அறிகுறிகள் இருந்ததால் தான் தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவை, கேரள எல்லைப்பகுதியில் இருப்பதால் தொற்று அதிகரித்துள்ளது. மேலும், கேரள எல்லையையொட்டி இருக்கக்கூடிய 9 மாவட்டங்களிலும் தொற்று அதிகரித்து வருகிறது.

குழந்தைகளுக்கு தடுப்பூசி
அந்த 9 மாவட்டங்களில் கூடுதலாக தடுப்பூசி போடுவதற்காக அனைத்து நடவடிக்கையும் மக்கள் நல்வாழ்வுத்துறை எடுத்து வருகிறது. அதேபோல, கேரளாவிலும் மிக சிறப்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தசை சிதைவு போன்ற நோயினால் தமிழகத்தில் 7 குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தியாவில் எந்த இடத்திலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கவில்லை.

கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், 17 முதல் 18 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசிடம் பேசி இருக்கிறோம். அதுகுறித்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story